/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: யார் இந்த குகன்?
/
விசேஷம் இது வித்தியாசம்: யார் இந்த குகன்?
PUBLISHED ON : பிப் 01, 2026

பிப்.,1 - தைப்பூசம்
பலம் மிக்க நட்சத்திரம், பூசம். குருவுக்கு மிகவும் பிடித்தது. இதனால் தான் வியாழக்கிழமையும், பூசமும் இணைந்து வரும் தினத்தை, குரு புஷ்ய யோகநாள் என்பர். புஷ்யம் என்றால், பூசம். முருகப்பெருமான் தான், சிவனுக்கே குருவாக இருந்தவர். அந்த குருவை, குரு பகவான் திருச்செந்துார் வந்து வழிபட்டதாக, தல புராணம் சொல்கிறது.
தைப்பூசத் திருநாளில், ராமாயண கதாபாத்திரமான, குகன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், முருகனுக்கும், குகன் என்ற பெயர் உண்டு. குகன் என்றால், குகையில் வசிப்பவன் என்றாலும், குரு என்றும் ஒரு பொருள் உண்டு. முருகனுக்கு மிகவும் பிடித்தது மலைகள். மலைகளில் தான் குகைகள் இருக்கும், வள்ளி கூட, குகையில் சென்று தான் ஒளிந்தாள். திருச்செந்துாரில் இன்றும் வள்ளி குகை இருக்கிறது.
திருச்செந்துார் கடல் ஸ்தலமாக இருந்தாலும், இதையும் சந்தனமலை என்று தான் சொல்கின்றனர். எனவே, இங்கு குகை இருப்பதில் ஆச்சரியமில்லை.
அரசன் ஒருவன் வேட்டைக்கு வந்தபோது, விலங்குக்கு பதிலாக ஒரு முனிவரை கொன்று விட்டான். இதனால், பிரம்மஹத்தி என்னும் கொலைப்பாவம் அவனைப் பற்றியது. இதற்கு பரிகாரம் தேடி ஒரு முனிவரிடம் வந்தான். முருகனை வழிபடுபவர், அந்த முனிவர். தன் மகனுக்கும், முருகனின் பெருமைகளை சொல்வார். அரசன் வந்த போது, முனிவர் இல்லை. அவரது மகனே இருந்தான். அவனிடமே பிரச்னையை சொன்னான், அரசன்.
'இவ்வளவு தானா! கங்கையில் நின்று கொண்டு, 'முருகா முருகா' என, மூன்று முறை சொல்லுங்கள். அறியாமல் செய்த பாவம் நீங்கி விடும்...' என்றான், சிறுவன்.
அரசனும் அவ்வாறே செய்ய சென்றான். தந்தை வீட்டுக்கு வந்ததும், நடந்ததை சொன்னான்.
'அடப்பாவி! முருக நாமத்தின் மகிமை தெரியாமல் உளறி இருக்கிறாயே! இது ஒரு சாதாரண பிரச்னை. இதற்கு, முருகனின் பெயரை ஒரு தடவை நம்பிக்கையுடன் உச்சரித்தாலே போதும். அறியாமல் செய்த பாவம் நீங்கி விடும். நீ மூன்று முறை கூறச் சொல்லியிருக்கிறாய். முருகனின் பெருமை தெரியாத நீ, இன்னொரு பிறப்பில், அவரது பெயரான குகனின் பெயர் தாங்கி பூமியில் பிறப்பாய். விஷ்ணு தரிசனம் எப்போது கிடைக்கிறதோ, அப்போது தான் உனக்கு பாவ விமோசனம் கிடைக்கும்...' என்று சாபமே கொடுத்து விட்டார்.
அந்த சிறுவன் தான், குகனாக பிறந்து, விஷ்ணுவின் அவதாரமான, ராமரை படகில் ஏற்றிச் சென்றான்.
முருக வழிபாடு மிகப் பழமையானது என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது. ராம, லட்சுமணரை அழைத்து சென்ற விஸ்வாமித்திரர், அவர்களுக்கு முருகனின் பிறப்பு வரலாறை சொன்னதாக, வால்மீகி ராமாயணத்தின் பால காண்டத்தில் தகவல் இருக்கிறது. இதைத்தான், குமார சம்பவம் என்று சொல்வர். இதை, காளிதாசர் தனிக்காவியமாக படைத்துள்ளார். இந்தக் கதையை கேட்டால், கந்த லோகத்திலேயே வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பர்.
தைப்பூசத்தன்று, முருகனின் இன்னொரு பெயரான, குகன் பற்றிய விசேஷ தகவல்களை அறிந்து கொள்வதும் புண்ணியம் தானே!
தி. செல்லப்பா

