/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
விசேஷம் இது வித்தியாசம்: தெய்வத்தாய்!
/
விசேஷம் இது வித்தியாசம்: தெய்வத்தாய்!
PUBLISHED ON : மார் 15, 2026

மார்ச் 19 - தெலுங்கு புத்தாண்டு
ஆ ந்திரா மற்றும் தெலுங்கானா மக்கள் கொண்டாடும் இனிய விழா, தெலுங்கு புத்தாண்டு. ஏப்ரல், 14 சித்திரை முதல்நாள் தமிழ் புத்தாண்டு. ஆனால், தெலுங்கு மக்களுக்கு மார்ச் மாதமே, புத்தாண்டு துவங்கி விடும். அவர்களது முதல் மாதத்தின் பெயர், சைத்ரமு. இந்நாளில், ராமாயணம் கேட்பது புண்ணியம் என, கருதுகின்றனர், தெலுங்கு மக்கள்.
அவர்களோடு இணைந்து, நாமும் பலரும் அறியாத அபூர்வ ராமாயண சம்பவம் ஒன்றை அறிந்து கொள்வோமா!
ராமாயணத்தில் தசரதர், கைகேயி, ராமன், சீதா, ராவணன் என, அறிந்த பாத்திரங்கள் பல உண்டு. ஆனால், இருதய சுந்தரி, மகேந்திரவர்மன், பவனஞ்செயன், நாகார்ஜுனர் போன்ற பாத்திரங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா?
கேசர குலத்தின் அரசன், மகேந்திரவர்மன். இவனது மனைவி, இருதய சுந்தரி. இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. ஆனால், மகள் இல்லையே என்ற வருத்தம் அரசருக்கு இருந்தது.
ஒருமுறை, நாகார்ஜுனர் என்ற ஜோதிடர், அரசரை சந்திக்க வந்திருந்தார். சிவனைக் குறித்து, ருத்ர யாகம் செய்தால், பெண் குழந்தை பிறக்கும் என, கூறினார். யாகம் நடந்தது. அரசியும் கருவுற்றாள்; பெண் குழந்தையும் பிறந்தது. குழந்தைக்கு, அஞ்சனை என, பெயர் சூட்டினர். அஞ்சனை என்றால், அழகிய கண்களைக் கொண்டவள் என்று அர்த்தம்.
கேசர குல இளவரசன், பவனஞ்செயனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவனை குலத்தின் பெயரால், கேசரி என்றும் சொல்வர்.
திருமணமான அன்று, சாந்தி முகூர்த்தத்துக்கு முன்பே, போர் ஒன்றுக்கு, பவனஞ்செயன் செல்ல வேண்டியதாயிற்று. போர் விதிகளின்படி, அது முடியும் வரை அரண்மனைக்கு திரும்ப கூடாது என்பது நிபந்தனை. ஆனால், யாருக்கும் தெரியாமல் வந்து, அஞ்சனையுடன் உறவு கொண்டான், பவனஞ்செயன். அவள் கர்ப்பமானாள். கணவன் இல்லாத நேர த்தில், கர்ப்பமான மருமகளை, மாமியார் சந்தேகித்தாள். மருமகள் நடந்ததைச் சொல்லியும் கேட்காமல், அவளை வீட்டை விட்டு விரட்டி விட்டாள்.
அஞ்சனை காட்டுக்குச் சென்று, மேதாதிதி என்ற முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கினாள். அவளது கதையை ஞானதிருஷ்டியால் உணர்ந்த, முனிவர், அவளது வயிற்றில் வளர்வது சிவாம்சமான, ருத்ரன் என்பதை அறிந்தார்.
குழந்தையும் பிறந்தது. இதை தேவர்கள், மற்றும் முனிவர்கள் அறிந்து ஆஸ்ரமத்திற்கு வந்தனர். புலஸ்திய முனிவர் குழந்தைக்கு, மகாவீர் என, பெயர் சூட்டினார். அந்தக் குழந்தை, விஷ்ணு பக்தனாக விளங்கும் என்றார். அந்தக் குழந்தை தான் பிற்காலத்தில், அனுமன் என பெயர் பெற்று, ராமசேவை செய்தது. போர் முடிந்து திரும்பிய, பவனஞ்செயன், மீண்டும் மனைவியுடன் இணைந்தான்.
அனுமனின் தாய், அவரைப் பெற்றெடுக்க, தாங்க முடியாத கஷ்டங்களை அனுபவித்தாள். அவ்வகையில், அவள் ஒரு தெய்வத்தாயாக திகழ்கிறாள்.
தெலுங்கு புத்தாண்டில் வித்தியாசமான வரலாறு ஒன்றை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி தானே!
தி. செல்லப்பா

