PUBLISHED ON : ஜூன் 07, 2026

ஜூன் 11 - பரமா ஏகாதசி
பாரதம் முழுவதும், வைகுண்ட ஏகாதசி விரதத்தை பக்தர்கள் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கின்றனர். ஆனால், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, சிறப்பு ஏகாதசி ஒன்று வரும். இதை, பரமா ஏகாதசி என்பர். மகாராஷ்டிராவில், இந்த பரமா ஏகாதசி மிகமிக விசேஷம்.
இந்த நாளில், கோதாவரி நதியில் நீராட ஏராளமான பக்தர்கள் கூடுவர். குறிப்பாக, பீட் மாவட்டம், புருஷோத்தம்புரியிலுள்ள புருஷோத்தமர் கோவிலில் மிகப்பெரிய விழா எடுக்கப்படும். இந்த பரமா ஏகாதசி வரும் மாதங்கள் அவ்வப்போது மாறுபடும்.
தமிழகத்தில் சூரிய நாட்காட்டியில், ஒரு தமிழ் ஆண்டுக்கு, 365 நாட்கள் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சூரியன் ஒவ்வொரு ராசியிலும் புகும் முதல்நாள் மாதப்பிறப்பாக அமையும்.
வடமாநிலங்களில் பயன்படுத்தப்படும் சந்திர நாட்காட்டியில் ஆண்டுக்கு, 354 நாட்கள் மட்டுமே உண்டு. இது, சந்திரனின் சுழற்சி அடிப்படையில் மாதங்களுக்குரிய நாட்களைக் கணிப்பதால், மாறுபடுகிறது.
இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட, 11 நாட்கள், இரண்டு நாட்காட்டிகளிலும் மாறுபடும். எனவே, வித்தியாசப்படும் நாட்களை சரி செய்ய ஒரு புதிய மாதத்தை உருவாக்கினர். இதை, 'அதிக் மாஸ்' அதாவது, 'அதிக மாதம்' அல்லது 'மல மாதம்' என்றனர்.
ஒவ்வொரு மாதத்திலும், ஒவ்வொரு தெய்வ வழிபாடு விசேஷமாக செய்யப்படும். 'அதிக மாதத்தில்' மட்டும் எந்த வழிபாடும் இல்லை. இதையறிந்த விஷ்ணு, புருஷோத்தமர் என்ற பெயர் தாங்கி, அந்த மாதத்தில் தன்னை வழிபட அனுமதி அளித்தார். இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசிக்கு, பரம ஏகாதசி என பெயரிட்டு, அந்த நாளில் தன்னை வழிபட்டால், ஒரு ஆண்டில் வரும் அத்தனை ஏகாதசிகளுக்குரிய பலன்களும் கிடைக்கும் என, அருள்பாலித்தார்.
அந்த சமயத்தில், ஷர்துாலன் என்ற அசுரன், மக்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க, தன் சுதர்சன சக்கரத்தை ஏவினார், மகாவிஷ்ணு. அந்த சக்கரம் கோதாவரி நதியில் விழுந்தது. அந்த இடத்திற்கு, சக்கர தீர்த்தம் என்று பெயர். சக்கரம் விழுந்த இடம், மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்திலுள்ள, புருஷோத்தம்புரி ஆகும்.
இந்த இடத்தின் சிறப்பை அறிந்த மன்னர் ஒருவர், அந்த இடத்தில், புருஷோத்தமருக்கு கோவில் எழுப்பினார். காலப்போக்கில் இது விரிவாக்கப்பட்டது. 'அதிக மாதம்' முழுவதும், கோதாவரியில் பக்தர்கள் புனித நீராடுவர். பரமா ஏகாதசியன்று லட்சக்கணக்கானோர், புருஷோத்தமரை வழிபட வருவர்.
இந்த ஆண்டு, கடந்த மே 17ல், துவங்கிய, 'அதிக மாதம்' ஜூன் மாதம் 15ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 11ல், பரமா ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து மஹா., மாநிலம், அகில்யா நகர் (அகமத்நகர்) 1170 கி.மீ., அங்கிருந்து 168 கி.மீ., சென்றால், பீட் நகர் வரும். இங்கிருந்து, 60 கி.மீ., துாரத்தில், புருஷோத்தம்புரி உள்ளது.
சென்னையில் இருந்து அகில்யா நகருக்கு விமானங்களும் செல்கின்றன.
தி.செல்லப்பா
