
நாம் உலகில் இருக்கும் வரை தான், நம்மைச் சுற்றியுள்ள உறவுகள், நம்மை நினைவில் வைத்திருக்கும். மறைந்து விட்டால், சில காலம் அழுது, மறந்து விடும். ஆனால், சிவன் நம்மை மறக்க மாட்டார். மறைந்தாலும், நம்மை மீண்டும் உலகில் பிறக்க வைப்பார்.
கருணைக்கடலான அவர், ஒரு சமயம், கணவனை இழந்த ஒரு பெண்ணின் கணவருக்கு உயிர் தந்தார். இந்த நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடி பிராணனைக் கொடுத்த பிராணநாதேஸ்வரர், மாங்கல்யம் கொடுத்த மங்களாம்பிகை கோவிலில் நடந்தது.
காலவ முனிவர் என்பவர், தனக்கு கிரக தோஷத்தால், தொழுநோய் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தார். இதனால், நவக்கிரகங்களை எண்ணி தவமிருந்தார்.
கிரகங்கள் அவர் முன் தோன்றி, 'விதியை மாற்ற எங்களால் முடியாது...' என, கை விரித்தன.
கோபமடைந்த முனிவர், 'எனக்கு வரவேண்டிய தொழுநோய், கிரகங்களைப் பற்றட்டும்...' என, சாபம் விட்டார். நோயால் பாதிக்கப்பட்ட கிரகங்கள், சிவனிடம் சரணடைந்தன.
'நீங்கள், காவிரிக்கரையிலுள்ள வெள்ளெருக்கு வனம் சென்று, வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் வைத்து சாப்பிட்டு வர, நோய் நீங்கும்...' என்றார்.
கிரகங்களும் அவ்வாறே செய்தன. அவர்களுக்கு காட்சி தந்து, சாப நிவர்த்தி வழங்கினார், சிவன்.
முதலாம் குலோத்துங்கன் காலத்தில், இத்தலத்தின் பெருமை பற்றி கேள்விப்பட்ட அமைச்சர் அனலவாணன், மக்கள் வரிப்பணத்தில், சிவனுக்கு கோவில் கட்டினார்.
தன் அனுமதியின்றி கோவில் கட்டியதால், கோபமடைந்த மன்னர், அனலவாணனுக்கு மரண தண்டனை வழங்கினார்.
அனலவாணன் கொல்லப்பட்டார். இதையறிந்த அவரது மனைவி, கோவிலுக்கு வந்து, அங்குள்ள மங்களாம்பிகையிடம் புலம்பினாள்.
அம்பாள், அதை சிவனிடம் சொல்ல, மறைந்த அமைச்சருக்கு, உயிர் வழங்கினார், சிவன்.
இதனால், சுவாமியை, பிராணனைக் கொடுத்த பிராணநாதா என்றும், அம்பாளை, மாங்கல்யம் கொடுத்த மங்களாம்பிகா என்றும் கூவி அழைத்தாள்.
அவள் முன் தோன்றிய அம்பாள், 'இனி, இத்தலம் வரும் பெண்களுக்கு, தீர்க்க சுமங்கலி பாக்கியம் தருவேன்...' என, வாக்களித்தாள்.
இதனால், பெண்களின் சிறப்பு கோவிலாக, இது விளங்குகிறது.
பிப்., 27 - மாசி மகம். தங்கள் கணவரின் நல்வாழ்வை விரும்பும் பெண்கள், இந்நாளில் இந்தக் கோவிலுக்கு சென்று வாருங்கள்.
கும்பகோணத்தில் இருந்து ஆடுதுறை வழியாக சூரியனார்கோவில், 18 கி.மீ., இங்குள்ள பஸ் ஸ்டாப்பில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில், திருமங்கலக்குடி கோவில் உள்ளது.
தொலைபேசி: 0435 - 247 0480.
தி. செல்லப்பா