PUBLISHED ON : ஆக 12, 2026

தக்காளியில் காய்துளைப்பான், வெள்ளை ஈ மற்றும் இலைப்பேன் ஆகியவை சேதத்தை ஏற்படுத்தும் பூச்சிகள். இவைகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் அவசியம்.
காய்துளைப்பான்
புழுக்கள் காயைத் துளைத்து உள்ளே சென்று சேதப்படுத்தும். புழுக்கள் இளம் இலைகளைத் தின்று சேதப்படுத்துகின்றன. காய்களில் வட்ட வடிவத் துளைகள் காணப்படும். புழு தன் உடலின் ஒரு பகுதியை மட்டும் காய்க்குள்ளே விட்டு உட்பகுதியைத் தின்று தள்ளும். தாக்கப்பட்ட காய்கள் அழுகி உதிர்ந்துவிடும்.
பொறி பயிர்கள்
தக்காளிச் செடிகளுக்கு நடுவே சாமந்தி அல்லது சோளப் பயிர்களை வரப்புப் பயிராக அல்லது பொறிப் பயிராக நடவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 முதல் 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து தாய் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு 50 எண்ணிக்கையில். பறவை உட்காரும் குச்சிகளை அமைத்து பூச்சிகளை உண்ணச் செய்யலாம். சேதம் அதிகமானால் 10 லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் 20 மில்லி அல்லது குளோரண்ட்ரனிலிப்ரோல் 1.5 மில்லி கலந்து தெளிக்கலாம்.
வெள்ளை ஈ
இலைகளில் சாற்றை உறிஞ்சி, மஞ்சள் இலை சுருட்டை வைரஸ் நோயைப் பரப்பும். இலைகளின் அடிப்பகுதியில் வெள்ளை நிற சிறிய பூச்சிகள் கூட்டமாக இருக்கும். இலைகளில் மஞ்சள் புள்ளிகள் தோன்றி இலைகள் கீழ்நோக்கிச் சுருளும். பூஞ்சை வளர்ச்சியால் இலைகள் கருப்பாக மாறும்.
மஞ்சள் ஒட்டு பொறிகள்
ஏக்கருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மஞ்சள் அட்டைகளில் பசை தடவி வைக்கவும். இலைகளின் அடிப்பகுதியில் படும் படி வேப்ப எண்ணெய் அல்லது இயற்கை சோப்பு நீரைத் தெளிக்க வேண்டும். செடியைச் சுற்றியுள்ள களைகளை அகற்ற வேண்டும். தேவைக்கு அதிகமாக தழைச்சத்து உரம் (நைட்ரஜன்) இடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இலை துளைப்பான்
இலைகளில் வளைந்து செல்லும் வெள்ளை நிறக் கோடுகள் உருவாகும். இலைகளில் வெண்ணிற கோடுகள் அல்லது சுருக்கங்கள் உருவாகும். தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து வாடிவிடும்.பாதிக்கப்பட்ட இலைகளை உடனே பறித்து அழிக்க வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை வைத்து பூச்சிகளை ஈர்த்துக் கவரலாம்.
- எம். அருண் ராஜ், சி. சபரிநாதன் தொழில்நுட்ப வல்லுநர்கள், சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி.
