PUBLISHED ON : ஜூன் 03, 2026

கோடைகாலத்தில் விவசாய நிலங்களை நிர்வகிப்பதும், சாகுபடி செய்வதும் சவாலான ஒன்று. கடுமையான வெப்பம், நீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க சில நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
கோடை உழவு
அறுவடை முடிந்தவுடன் நிலத்தை கோடை உழவு செய்ய வேண்டும். இது மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், மண்ணில் உள்ள பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள், நோய்க்கிருமிகளை சூரிய வெப்பத்தின் மூலம் அழிக்கவும் உதவும். மண்ணின் காற்றோட்டத்தை அதிகரித்து அடுத்த சாகுபடிக்கு மண்ணை தயார்படுத்துகிறது.
நீர் மேலாண்மை
கோடையில் தண்ணீர்ப் பற்றாக்குறையை சமாளிக்க சொட்டுநீர் அல்லது தெளிப்புநீர்ப் பாசன முறைகளைப் பயன்படுத்தலாம். நிலத்தில் பண்ணைக் குட்டைகளை அமைத்து கோடை மழையைச் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தலாம். பயிர்களைச் சுற்றி காய்ந்த இலைகள், சருகு அல்லது வைக்கோல் கொண்டு மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் ஆவியாவதைத் தடுக்கலாம்.
பயிர் தேர்வு
குறைந்த நீரில் வளரக்கூடிய வறட்சியைத் தாங்கும் பயிர்களைத் தேர்வு செய்ய வேண்டும். உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு சாகுபடி செய்யலாம். நிலக்கடலை, எள், சூரியகாந்தி பயிர்கள் கோடைக்கு ஏற்றவை. முறையான நீர்ப்பாசனத்துடன் தக்காளி, மிளகாய், கத்தரி சாகுபடி செய்யலாம்.
திரவ உயிரி உரம்
பி.பி.இ.எம். எனப்படும் திரவ மெத்தைலோ பாக்டீரிமானது வறட்சியைத் தாங்கி பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு உயிரி உரம். நீர்ப் பற்றாக்குறை காலங்களில் பயிர்களை வாடாமல் பாதுகாக்கிறது. செடிகள் பச்சையாகவும் செழிப்பாகவும் வளரச் செய்கிறது. பொட்டாஷ் பாக்டீரியா போல இது பயிரின் ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனை மேம்படுத்துகிறது.
பயன்படுத்தும் முறை
ஒரு ஏக்கருக்கு 250 முதல் 500 மில்லி திரவ உயிரி உரத்தை எடுத்து அதை 150 முதல் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் இலைகள் மீது அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
மண், பயிர்ப் பாதுகாப்பு
பசலைக்கீரை, கொத்தமல்லி போன்றவற்றை நிழற்பாங்கான இடங்களில் பயிரிடலாம். நிலத்தை பயிரிடாமல் விட்டால் களைகள் சேர்ந்து தரிசாகி விடும். அதற்கு பதிலாக தக்கைப்பூண்டு அல்லது சணப்பை போன்ற பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து நிலத்தில் உழுது விடுவதன் மூலம் மண்ணின் வளம், நீர்பிடிப்புத் தன்மையை அதிகரிக்கலாம். உரச்செலவும் குறையும். விவசாயத்துடன் தேனீ வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு போன்ற தோட்டக்கலை சார்ந்த தொழில்களில் ஈடுபடலாம், இது கூடுதல் லாபத்தைத் தரும்.
- சபரிநாதன், அருண்ராஜ்
தொழில்நுட்ப வல்லுனர்கள்
சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம்
தேனி
