PUBLISHED ON : ஏப் 17, 2013
வறட்சியை சமாளிக்க வளமான யோசனையை, விவசாயத் துறையின் (நீர்மேலாண்மை நிலைய) மதுரை துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். வறட்சி என்பது ஆண்டுதோறும் பல வடிவங்களில் தோன்றும் இயற்கை கோளாறு. நெல், தோட்டப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிணற்றிலோ, குளத்திலோ இல்லை என்றால், அதனை 'வறட்சி' எனலாம். இதனால் விவசாயம் மட்டுமின்றி, அனைத்து தொழிலும் நசிந்துவிடும்.
வறட்சியின் தன்மை என்பது, பெய்த மழை 75 சதவீதம் எனில், குறைவான வறட்சி. மழை 50 சதவீதம் எனில் மிதமான வறட்சி. அதற்கும் குறைவு எனில், கடுமையான வறட்சி. இதுவும் அந்தந்த பகுதியின் சூழ்நிலைக் கேற்ப மாறுபடலாம்.
உதாரணமாக ஒருபோகம் மட்டும் வேண்டிய அளவு மழை பெய்யாமல், அடுத்த போகத்தில் வேண்டியளவு மழை பெய்தால், அது தற்காலிக வறட்சி. தொடர்ந்து 2 அல்லது 3 போகங்களுக்கு மழை பெய்யாவிட்டால் அதை நிரந்தர வறட்சி எனலாம்.
வறட்சி காலங்களில் எல்லா பகுதிகளிலும் கவனிக்க வேண்டிய வழிமுறைகளாக, மதுரை நீர்மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது:
* களிமண் பகுதியில் நெல்லை நேரடி விதைப்பு செய்யலாம். திருந்திய நெல்சாகுபடி முக்கியம்.
* மணல் சார்ந்த இடங்களில் குறைந்த வயது பயறு வகைகள், எள் சாகுபடி.
* மாற்றுச் சால் பாசனம், தெளிப்பு நீர், சொட்டுநீர்ப் பாசனம், துல்லிய பண்ணையம், ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நீர்இழப்பினை குறைக்கலாம்.
* நீர் குறைவாக தேவைப்படும் சிறுதானிய பயிர்கள், கடலை, சூரியகாந்தி, மரப்பயிர்கள் சாகுபடி, மரங்களுக்கு உறிமட்டை பதித்தல், தென்னை நார்க் கழிவு, பசுந்தழை, தாள் உரம், எருஇடுதல் மூலம் ஈரத்தை வேர்ப்பகுதியில் இருத்தி வைக்கலாம்.
* மண், இலைகளில் இருந்து நீர் ஆவியாதலை தடுத்தல்.
* மாற்றுப் பயிர் திட்டம் செயல்படுத்தல்.
* வறட்சியை தாங்கும் மா, சப்போட்டா, சீமை இலந்தை, செர்ரி, கொய்யா, மாதுளை பழமரங்களை பயிர்செய்யலாம்.
* தொடர் வறட்சியில் வேர்அழுகல், சாம்பல்நோய், இலைப் பேன்கள், தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி, வெள்ளை ஈ தாக்குதலின் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம்.
* விவசாயத்துடன் இணைந்த துணைத் தொழில்களான மாடு, கோழி, ஆடு, முயல், வாத்து, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு மூலம் தொடர் வருவாய் கிடைக்கலாம்.
இவை தவிர புதிய தொழில்நுட்பங்களான நிழல்வலைக் கூடம், பசுமை குடில்கள் மூலம் குறைந்த இடத்தில், குறைவான நீரில் அதிக வருவாய் பெறலாம். தொழு உரம், கம்போஸ்ட் உரம், பண்ணை குட்டை, கசிவுநீர் குட்டை, ஆழச்சால், அகலப்பாத்தி, சீசல் கலப்பை உழவு மூலம், மண்ணில் நீரை இருத்தி வைக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.