PUBLISHED ON : ஆக 01, 2012

ஆடுதுறையில் இயங்கிவரும் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆடுதுறை 50 என்ற புதிய நெல் ரகத்தினை தமிழ்நாடு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. பாபட்லா 5204 என்ற நெல் ரகத்தினை சி.ஆர்.1009 என்ற ரகத்துடன் கருவொட்டு சேர்த்து ஆடுதுறை 50 ரகத்தினை உருவாக்கப் பட்டுள்ளது. இதன் வயது 150 நாட்கள். மற்றும் ரகம் சன்னமானது. தற்போது விவசாயிகள் ஆடுதுறை 50 ரகத்தை சாகுபடி செய்து வருவது குறிப்பிடத் தக்கது. வேளாண் வித்தகர் கோ.மோகன்ராஜ் யாதவ், வாஞ்சை, சங்கமங்கலம்-611 108, சிக்கல் வழி, நாகப்பட்டினம், மொபைல்: 94430 14897, கடந்த மூன்று ஆண்டு காலமாக ஆடுதுறை 50 ரகத்தை சாகுபடி செய்து நல்ல பலனை அடைவதோடு விவசாயி களை இந்த புதிய ரகத்தை சாகுபடி செய்ய சிபாரிசு செய்து வருகிறார். இவர் தான் செய்த சாகுபடியில் ஏக்கரில் 1,920 கிலோ மகசூல் அதாவது 60 கிலோ கொண்ட மூடை 32 மகசூலாக எடுத்துள்ளார். 32 மூடைகளின் விலை ரூ.22,656. ஏக்கர் சாகுபடி செலவு ரூ.9,330. ஏக்கரில் நிகர லாபம் ரூ.12,326. இச்சாகுபடியின் சிறப்பு யாதெனில் விவசாயி நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்ததாகும்.
சாகுபடி முறைகள்: 24 குழி (8 சென்ட்) பரப்பு நாற்றங்காலில் ஒரு சென்டிற்கு 50 கிலோ தொழு உரம் வீதம் 400 கிலோ நன்கு மக்கிய தொழு உரமிட்டு பழஞ்சேற்றில் தெளிப் பரம்பில் ஒரு ஏக்கருக்கு தேவையான ஈர விதை நேர்த்தி செய்யப் பட்ட 12 கிலோ முளை கட்டிய மூன்றாங்கொம்பு விதை விதைத்தார். விதைப்பிலிருந்து பத்தாம் நாள் (8 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பசுங் கோமியம்+ 3 கிலோ வேப்பிலை ஊரல்)பசுங்கோமியத்துடன் கலந்து வேப்பிலை சாறு தெளிக்கப்பட்டது. நாற்றின் வயது 28 நாட்களானபோது நாற்று பறித்து உடனே நடவு செய்யப் பட்டது.
நடவு வயலில்: தக்கைப்பூண்டு வயலில் விதைக்கப்பட்டு 49 நாள் வயலில் மடக்கி உழவு செய்ததும் பரம்பு வைத்து 28 நாட்கள் வயது நாற்று பள்ளமான வயலில் கிழக்கு மேற்காக கயிற்று நடவு, ஒரு குத்துக்கு இரண்டு நாற்று வீதம் ஒரு குத்துக்கும் மற்றொரு குத்துக்கும் பத்து அங்குலம் இடைவெளிவிட்டு நடவு செய்யப் பட்டது. நடவின்போது 40 கிலோ கலவைப் புண்ணாக்குத்தூள் வயலில் இடப்பட்டது. நடவு நட்ட ஏழாம் நாள் பயிர் பச்சை கட்டியது. நடவு நட்ட 18, 28, 40ம் நாட்களில் களை மிதிக்கப் பட்டது. இதன்பிறகு பயிர் வளர்ச்சிக்கு ஏற்றபடி தூர்கள் தோன்ற ஆரம்பித்தன. பயிரை பூச்சி தாக்குதலிலிருந்து பாதுகாக்க நடவு நட்ட 20, 36 மற்றும் 58ம் நாட்களில் பயிரின் மீது வேம்புக் கரைசல் தெளிக்கப்பட்டது. நடவு நட்ட 95ம் நாள் மீண்டும் பயிருக்கு 30 கிலோ கலவைப் புண்ணாக்குத் தூள் மணலுடன் கலந்து வயலில் இடப் பட்டது. பயிர் நன்றாக வாளிப்பாக வளர்ந்து பூக்கத் தொடங்கியது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இவ்வாண்டு கனத்த மழை ஆரம்பத்திலிருந்தே இருந்ததால் அதிகமான தூர்களையும் பார்க்க முடியவில்லை. பள்ளமான வயல் என்பதால் தண்ணீர் வடிகட்ட சற்று சிரமமாக இருந்தது. கதிர் வெளிவந்து பால் பிடித்து முற்றும் சமயத்தில் ஒரு சில இடங்களில் வெண்சாவி தோன்றியது. ஆனால் முற்றிய கதிர்களில் கருக்காய் எதுவும் தோன்றவில்லை. நெல் மணி முற்ற முற்ற பயிர் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளித்தது. பயிர் 135 செ.மீ. உயரம் வளர்ந்து சி.ஆர்.1009 பயிர் போன்று காட்சியளித்ததுடன் பயிரின் மணிகள் பாபட்லா நெல் போல் சிறியதாகவும் மிகச் சன்னமாகவும் நெருக்கமாகவும் காணப்பட்டது. சாகுபடி சமயத்தில் பூச்சியோ, நோயோ இதில் தென்படவில்லை. 150 நாட்களில் பயிர் அறுவடைக்கு வந்தது.
அறுவடையில்: ஒரு ஏக்கரில் மொத்தம் 1,920 கிலோ மகசூல் கிடைத்தது. அதாவது 60 கிலோ கொண்ட 32 மூடை கிடைத்தது.
வேளாண் வித்தகர் விவசாயிகளுக்கு கூறுவது: இயற்கை உரச் சாகுபடியில் ஆடுதுறை 50 நெல்ரகம் சிறந்த மகசூல் கொடுக்கும் தன்மையுடையது. நாலரை அடி (135 செ.மீ) உயரம் வளரும் தன்மைஉடையது. இந்த நெல் ரகத்தினை நடவின்போது 10 அங்குலம் து 10 இடைவெளி விட்டு பள்ளமான வயல்களில் ஒரு குத்துக்கு இரண்டு நாற்று வீதமும் தண்ணீர் தேங்காத சமமான வயல்களில் குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்யவும். இவ்வாறு அதிக இடைவெளி விட்டு நடுவதால் தூர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாற்றின் வயதுகுறைந்தது 18 நாட்களிலும் அதிகபட்சம் 28 நாட்களுக்கு முன்னதாகவும் பறித்து நடவு செய்யும் குத்துக்களில் அதிகபட்சமாக 38 தூர்கள் சர்வ சாதாரணமாகத் தோன்றியது. ரவையில் அரிசி வெள்ளையாகவும் சன்னமாகவும் உள்ளது. 100 கிலோ நெல்லில் 64 கிலோ உடையாத பச்சரிசி கிடைக்கிறது. சாகுபடி செலவைக் குறைத்து, அறுவடைக்குப் பிறகு நெல்லை அரிசியாக மதிப்பூட்டி விற்பனை செய்தால் இயற்கையில் விளையும் இந்த ரகத்தில் சிறந்த லாபம் பெறலாம். இந்த நெல் ரகம் தமிழக விவசாயிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாகும். பள்ள மான இடங்களில் சி.ஆர்.1009க்குப் பதிலாக இந்த ரகத்தை சாகுபடி செய்தால் ஒரு மூடைக்கு ரூ.30 கூடுதலாக விலை கிடைக்கிறது.
-எஸ்.எஸ்.நாகராஜன்

