sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி

/

இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி

இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி

இயற்கை வேளாண்மையில் கத்தரி சாகுபடி


PUBLISHED ON : அக் 17, 2012

Google News

PUBLISHED ON : அக் 17, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இயற்கை முறை சாகுபடி:

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடி நீளம், 4 அடி அகலம், 4 அங்குலம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். இதோடு இயற்கை உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போடவேண்டும். காய்கறி செடிகளில் தோன்றும் மிகக்கொடிய வாடல் நோயினைக் கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என்னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசனக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண்ணினை நன்கு கொத்திவிட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும். நாற்றங்காலைத் தொடர்ந்து நடவுவயல் தயாரிப்பதற்கு நல்ல கவனம் தரவேண்டும். நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப்பை கொண்டு உழ வேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போடவேண்டும். (இரண்டரை x 2 அடி) நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ்வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா, ஒரு கிலோ டிரைகோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டுபாசனம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவனமாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும்.

ஹியூமிக் அமிலம் பயிர் வளர்ச்சிக்கு அவசியம் ஆனது. இன்றைய காய்கறி சாகுபடியில் பல சூழ்நிலைகளில் விவசாயிகள் இயற்கை உரத்தை செடிகளுக்கு அதிகமாக இடமுடிவதில்லை. இம்மாதிரி தருணங்களில் மகசூல் குறைந்து, கிடைக்கும் லாபத்தின் அளவு குறைந்து காணப்படுகின்றது. சில விவசாயிகளுக்கு நஷ்டமும் ஏற்படுகின்றது. இதைத் தவிர்க்க ஹியூமிக் அமிலக் கரைசல் இலை வழியாக தெளித்து வருவதால் மகசூல் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

அனுகூலங்கள்:

இதை தெளிப்பதால் சத்து குறைந்த பூமியில் நல்ல பலன் கிடைக்கும். ஹியூமிக் அமிலம் தெளித்த செடிகளின் வேர்கள் பூமியில் இடப்பட்ட உரத்தை எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையை ஏற்படுத்துகிறது. இதை தெளிப்பதால் இலையில் பச்சையும், சர்க்கரை சத்து மற்றும் அமினோ அமிலம் உற்பத்தி ஆக உதவுவதால் ஒளிச்சேர்க்கை ஏற்பட்டு மகசூல் அதிகரிக்க வழி வகை செய்கின்றது. தெளிப்பதால் பூமியில் இடப்பட்டுள்ள தழை, மணி, சாம்பல், இரும்பு மற்றும் துத்தநாதகம் போன்றவற்றை செடிகள் எளிதில் கிரகித்துக் கொள்ள உதவுகின்றது. இது செடிகளுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர் வளர்ச்சியை ஊக்குவித்து மகசூலை அதிகரிக்க வழிவகை செய்கிறது. செடிகளுக்கு பூச்சி, வியாதிகளை எதிர்த்து வளரும் சக்தியை கொடுக்கிறது.

ஜே பண்ணையில் பரிசோதனை:

ஹியூமிக் அமிலத்தின் திறனை அறிவதற்காக கத்தரி சாகுபடியில் இது உபயோகப்படுத்தப் பட்டது. இது பயிரின் 135, 155 மற்றும் 175வது நாளில் தெளிக்கப்பட்டு வந்தது. ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மில்லி ஹியூமிக் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு தேவையான 200 லிட்டர் தண்ணீரில் (ஒரு லிட்டர்/ஒரு ஏக்கர்) கலந்து தெளிக்கப் பட்டது. இவ்வாறு தெளிக்கப்பட்ட செடிகளின் இலைகள் பார்ப்பதற்கும் பச்சை நிறத்துடனும் அதிகமான பூக்கள் காய்களுடனும் பசுமையாக காணப்பட்டது.

நடவு நட்ட மூன்று வாரம் கழித்து மாதம் இருமுறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துகளான பவேரியா பாசியானாவை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்தானது செடிகளைத் தாக்கும் காய்ப்புழுக்களுக்கு வியாதியை உண்டாக்கி கடுவிரைவில் அவைகளை மடியச் செய்து விடுகின்றது. இதைத் தொடர்ந்து இலைகளுக்கும் தண்டுகளுக்கும் பூக்களுக்கும் ஏற்படும் பூச்சிகளின் சேதத்தை தவிர்க்க வாரம் ஒரு முறை பைட்டோபிராட் என்னும் இயற்கை பூச்சிவிரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பாக செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதில் இருந்து காப்பாற்றுகின்றன.

வளரும் செடிகளுக்கு காலத்தில் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக்கும்போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி உலர்ந்தவுடன் ஆட்களை வைத்து கத்தரி செடிகளை சுற்றி பூமியைத் தளர கொத்திவிட வேண்டும். உடனே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய்யலாம். விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப்போது மேலே விவரித்தபடி செடிகளுக்கு இட்டுவர வேண்டும். இதனால் செடிகள் வெகு செழிப்பாக வளர்ந்து வருகின்றன.

மேற்கண்ட பணிகளை கவனத்தோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது கத்தரி செடிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கிடைக்கும். இயற்கை முறை சாகுபடியில் ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.22,000 ஆகும். காய்கள் விற்பனையில் வரவு ரூ.68,000 கிடைக்கும். சாகுபடி செலவு போக ஏக்கரில் நிகர லாபம் ரூ.46,000 கிடைக்கும்.

ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்து அடிக்கும் சாகுபடி முறையில் சாகுபடி செலவு அதிகரித்துக் கொண்டே வரும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்காது. இயற்கை முறை சாகுபடி தொடர்ந்து செய்யும்போது சாகுபடி செலவு படிப்படியாக குறைந்துவிடும். ஆனால் கத்தரி மகசூல் அதிகரிக்கும். இதனால் சாகுபடியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இனி எதிர்காலத்தில் நீண்ட கால சாகுபடிக்கு இயற்கை முறை சாகுபடிதான் ஏற்றது. அந்த இயற்கை முறை சாகுபடிக்கு சக்தியைக் கொடுப்பது நுண்ணுயிர்களும் உயிர் உரங்களும் ஆகும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us