PUBLISHED ON : டிச 12, 2018

இந்தியாவில் மஞ்சள் சாகுபடி ஆண்டுக்கு ஒரு லட்சத்து ஏழாயிரம் எக்டேர் பரப்பளவில் நடக்கிறது. உலக அளவில் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 75 சதவீதம் இந்தியாவி்லும், தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகளவு நடக்கிறது. இங்கு 18 ஆயிரத்து 986 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. தவிர சேலம், கோவை, திருப்பூரிலும் கணிசமான பரப்பளவில் சாகுபடி நடக்கிறது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் விவசாயி ராமமூர்த்தி மஞ்சள் சாகுபடியில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் பயிராகும் மஞ்சள் ரகங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நாட்டு ரகங்களே சாகுபடி செய்யப்படுகிறது. இது ஏற்றுமதிக்கு ஏற்றதல்ல. நாரியப்பனுார், எறையூர் ரக மஞ்சளில் 'குர்குமின்' என்ற வேதிப்பொருள் நான்கு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. கோவை வேளாண் பல்கலை, பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையம், கோழிக்கோடு இந்திய வாசனை பயிர்கள் ஆராய்ச்சி மையம் போன்றவை பல புதிய உயர் விளைச்சல் ரகங்களை வெளியிட்டு உள்ளது. இதில் பிரதீபா என்ற ரக மஞ்சள் ஓரளவு வறட்சியை தாங்கி அதிகளவு நோய் தாக்குதல் இல்லாமல் வளர்ந்து அதிகளவு மகசூல் தரக்கூடியது.
வேடச்சின்னானுார் அருகே விதை பண்ணையில் பத்து ஏக்கரில் பிரதீபா ரக மஞ்சள் சாகுபடி செய்துள்ளேன். தற்போது மஞ்சள் செடிகள் 6 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.
இதுபற்றி அறிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த வேளாண் துறை சார்பில் முன்னோடி மஞ்சள் விவசாயி ஷனான் தலைமையில் விவசாயிகளை இந்தியாவிற்கு அனுப்பியது. இக்குழு எனது மஞ்சள் வயலை பார்வையிட்டனர். அதன் தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர். ஏக்கருக்கு 35 டன் மகசூல் எடுப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
இயற்கை முறையில் சாகுபடி செய்வதையும் அறிந்தனர். தாய்லாந்தை அடுத்து தைவான், பெரு, உகாண்டா, கம்போடியா, பர்மா ஆகிய நாடுகளிலும் பிரதீபா மஞ்சள் தொழில்நுட்பம் மற்றும் தாய் விதைகளை கேட்டு வருகின்றனர், என்றார். தொடர்புக்கு 94443 47775.

