PUBLISHED ON : ஏப் 25, 2012
அதிக வெப்பத்தினால் பருத்திக்கு அதிகம் நீர் பாய்ச்சப்படுகிறது. மேலும் தழைச்சத்து அதிகம் உள்ள இடங்களிலோ அல்லது இட்ட இடங்களிலோ செடி வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு பூ, காய் மற்றும் சப்பைகள் கொட்ட ஆரம்பிக்கும். இதனைக் கட்டுப்படுத்த நுனிக்கிள்ளுதல் அவசியமாகும். பயிர் வளர்ச்சியில் காய்கள் அதிக பருமனாவதற்கும் நன்கு வெடிக்கவும் கையாள வேண்டிய சில எளிய தொழில்நுட்பங்களில் நுனி அரும்பு கிள்ளுதல் என்பது முக்கிய தொழில் நுட்பமாகும். தழைச்சத்து உரங்கள் அதிகமாக இடுவதால் பயிர்கள் சில சமயங்களில் தேவைக்கு அதிகமாக வளர்ந்து பூப்பிடித்தல் திறன் பாதிக்கப்பட்டு காய்கள் பிடிப்பது குறைந்துவிடும். இத்தகைய தருணங்களில் செடியில் வளரும் நுனிகளை கிள்ளிவிடுவதால் பக்க கிளைகள் உருவாகி பூக்களும் காய்களும் அதிக எண்ணிக்கையில் உண்டாகி தக்க காலத்தில் வெடிக்க உதவி செய்கிறது. சத்துப்பொருட்கள் விரயமாவதைத் தடுத்து பூ மற்றும் காய்களுக்கு ஊட்டமளிக்க உதவி செய்கின்றது.
நுனி கிள்ளும் பருவம்: ரகம்: 15 கணுக்களுக்கு மேல் (75-90ம் நாட்களில்), வீரிய ஒட்டு ரகம்: 20 கணுக்களுக்கு மேல் (90-100ம் நாட்களில்) நுனி கிள்ளியபின் நாப்தலின் அசிடிக் அமிலம் 40 பிபிஎம் (பிளானோபிக்ஸ்) பயிர் ஊக்கியை 4.0 மில்லி மருந்தை 4.5 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் செடி வளர்ச்சி தடுக்கப்பட்டு காய்கிளைகள் அதிகம் தோன்றும்.
நன்மைகள்: காய்கள் அதிகம் தோன்றுதல், செடியின் நுனிக்கிளைகளில் உள்ள காய்ப்புழுக்களின் முட்டைகள் அழிந்துவிடும்.
முனைவர் ஆர்.ஜெயராஜன் நெல்சன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பருத்தி ஆராய்ச்சி நிலையம்,
ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125.

