PUBLISHED ON : பிப் 23, 2011

குளங்களில் பச்சை பசேல் என படர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரையை நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் இந்த தாமரை விவசாயிகளுக்கு நன்மையும் தீமை யும் செய்கிறது. ஆகாய தாமரைக்கு நீரை ஆவியாக்கும் தன்மை உண்டு. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து வேகமாக பரவுகிறது. மிக கனமாகவும், பசுமையான இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது. இதன் தண்டிலிருந்து புறப்படும் கிளைகள் விரைவில் புதிய செடியாக பரவும்.
இந்த தாவரம் நீர் நிலைகளில் தோன்றி விரைவில் பரவும். இவை அந்த தண்ணீரை எளிதில் ஆவியாக்குவதால் குளம் குட்டைகள் விரைவில் வறண்டுவிடும். எனவே விவசாயத்திற்கு மிகவும் ஊறு விளைவிக்கும் ஓர் தாவரமாக திகழ்கிறது.
ஆகாய தாமரையில் உள் அமைப்பு மற்றும் நார் போன்ற வேர்கள் தண்ணீரில் கலந்துள்ள உலோக வடிவிலான நச்சு பொருட்கள் எளிதில் உறிஞ்சி தன்னுள் சேமித்து வைத்துக் கொள்ளும். இதன் காரணமாக தண்ணீர் மாசு கட்டுப் பாட்டிலிருந்து பாதுகாக்கப் படுகிறது. மாசு நிறைந்த தண்ணீரில் காணப்படும் உலோகங்களான ''ஈயம்'' ''அர்சனிக்'' போன்ற நஞ்சு தன்மைகளை நீக்க விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சியில் ஆகாயத்தாமரை பயன்படுகிறது.
இயற்கை எரிவாயு தயாரிக்க ஆகாயத்தாமரை பயன்படும் என்கிற விஞ்ஞான பூர்வமான உண்மை கண்டறியப் பட்டுள்ளது. கேவிஐசி எனப்படும் அரசு நிறுவனம் ஆகாயத் தாமரையிலிருந்து எரிவாயு தயாரிக்கப் பயன்படும் ''கலன்களை'' அறிமுகம் செய்துள்ளது. சாண எரிவாயு கலன்களிலிருந்து சிறிய மாறுதல்களுடன் இந்த எரிவாயு கலன்கள் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இயற்கை உரம் அதிக நார் தன்மை கொண்ட தண்டு பகுதிகளை ஆகாயத்தாமரை கொண்டிருப்பதால் இயற்கை அங்கக உரம் தயாரிக்க முடியும் என்பதும் நிரூபணமாகி உள்ளது. 2 முதல் 3 மாதங்களில் நன்கு மக்கும். ஆகாயத்தாமரை இயற்கை உரம் அதிக அளவில் நுண்ணூட்ட சத்துகள் கொண்டுள்ளது.
'சேப்ரோபிக் பாக்டீரியா' ஆகாயத்தாமரையை 60 நாட்களில் மக்கவைத்து சிறந்த இயற்கை உரமாக மாற்ற வல்லது. ஆகாயத் தாமரையை ஒரு களையாக, விவசாயத்திற்கு எதிராக கருதி வரும் நாம் அதன் நன்மைகளையும் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்புக்கு: எம்.அகமது கபீர், 61, ஆர்.கே.ஆர்.நகர், தாராபுரம், திருப்பூர்-638 656.
அகமது கபீர்,
வேளாண்மை ஆலோசகர்,
93607 48542.
