ADDED : ஜூன் 11, 2026 10:33 PM

உடுப்பி: தாய் மடியில் இருந்த போது, ஒன்றரை வயது ஆண் குழந்தை தலையில், தென்னை மரத்தில் இருந்து இளநீர் விழுந்தது. இதில் காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.
உடுப்பி மாவட்டம், பிரம்ஹாவரா தாலுகாவின், சாந்தாரு ஹெரன்ஜே கிராமத்தில் வசிப்பவர் பிரசாந்த் பூஜாரி. இவரது மனைவி சுசித்ரா. தம்பதிக்கு தியா, 6, என்ற மகளும், தக்ஷ் என்ற ஒன்றரை வயதில் மகனும் இருந்தனர்.
பிரசாந்த் பூஜாரி பல ஆண்டுகளாக, பிரம்ஹாவராவின், காந்தி மைதானம் அருகில் சிறிய வண்டியில் சிற்றுண்டி கடை நடத்துகிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், காலையில் சுசித்ரா தன் மூத்த மகள் தியாவை, பள்ளி பஸ்சில் ஏற்றிவிட்டார்.
அதன் பின் மகனை மடியில் வைத்து கொண்டு, சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது, 40 அடி உயரமான மரத்தில் இருந்து, இளநீர் ஒன்று, குழந்தையின் தலையில் விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த குழந்தையை, பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மூளையில் காயம் ஏற்பட்டதால், சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை இறந்தது.
பிரம்ஹாவரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
