தெரு நாய்களை துன்புறுத்திய 2 மருத்துவர்கள் மீது வழக்கு
தெரு நாய்களை துன்புறுத்திய 2 மருத்துவர்கள் மீது வழக்கு
ADDED : செப் 10, 2026 11:07 PM
பெங்களூரு: ஆராய்ச்சி எனும் பெயரில் தெரு நாய்களை கொடுமை ப்படுத்திய இரண்டு கால்நடை மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் .
பெங்களூரு தொட்டகானஹள்ளியில் முறையான உரிமமின்றி தனியார் கால்நடை மருத்துவமனை இயங்குவதாக ஜி.பி.ஏ., கிழக்கு மண்டல கால்நடை துறை உதவி இயக்குனர் ருத்ரேஷுக்கு தகவல் வந்தது. இதன் படி, நேற்று முன்தினம் மாலையில், கால்நடை துறை அதிகாரிகள், அந்த வளாகத்தில் சோதனை செய்தனர்.
அப்போது, மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 12 நாய்கள், பூனை மீட்கப்பட்டது. மேலும், இறந்த நிலையில் கிடந்த நாயின் உடலும் மீட்கப்பட்டது. அதிகாரிகள் சோதனை செய்ய வருவதை அறிந்த மருத்துவமனை உரிமையாளர்கள் அனைவரும் தலைமறைவாயினர்.
தனியார் மருத்துவமனை எனும் பெயரில் சட்ட விரோதமாக தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்து, வினோதமான ஆராய்ச்சி நடத்தப்பட்டது சோதனையில் தெரிய வந்தது. இவர்கள் ஆராய்ச்சிக்கான நோக்கம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய ராம்நகரை சேர்ந்த கால்நடை மருத்துவரும், தனியார் கால்நடை மருத்துவமனையில் உரிமையாளருமான ஆசிப் பாஷா, 37, ஷிவமொக்காவை சேர்ந்த கால்நடை மருத்துவர் மஞ்சுநாத், 28, ஆகியோர் மீது பெல்லந்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
