போதையில் கார் ஓட்டிய வாலிபர் பைக் மீது மோதியதில் 2 பேர் பலி
போதையில் கார் ஓட்டிய வாலிபர் பைக் மீது மோதியதில் 2 பேர் பலி
ADDED : மார் 30, 2026 04:32 AM

வசந்த்நகர்: குடிபோதையில் காரை ஒரு வழி பாதையில் வேகமாக ஓட்டி சென்ற வாலிபர், பைக் மீது மோதியதில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு வசந்த்நகரில் உள்ள வக்பு வாரிய அலுவலகம் முன், இரு வழி சாலை செல்கிறது. நேற்று முன்தினம் இரவு ஒரு வழி பாதையில், ஒரு வாலிபர் காரை வேகமாக ஓட்டி வந்தார். எதிரே வந்த பைக் மீது மோதினார். பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட சிறுவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவல் அறிந்த ஐகிரவுண்ட் போக்குவரத்து போலீசார் அங்கு சென்று இருவரின் உடல்களையும், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஜுபைர் அகமது, 42, அவரது உறவினரின் மகன் முன்வீர் பாஷா, 16 என்பது தெரிந்தது.
காரை ஓட்டி வந்த அய்யப்பா, 26 என்பவர் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
