தேதி தராத எம்.எல்.ஏ.,க்கள் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் 22 இந்திரா உணவகங்கள்
தேதி தராத எம்.எல்.ஏ.,க்கள் திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் 22 இந்திரா உணவகங்கள்
ADDED : மார் 25, 2026 07:16 AM

பெங்களூரு: எம்.எல்.ஏ.,க்களின் அலட்சியத்தால் மாநிலத்தில், 22 இந்திரா உணவகங்கள் திறக்கப்படாமல் இருப்பது, மேலவையில் நகராட்சித்துறை அமைச்சர் ரஹீம் கான் அளித்த பதிலில் அம்பலமாகி உள்ளது.
கர்நாடகாவில் ஏழை மக்கள் குறைந்த விலையில் உணவு உண்பதற்காக, 2017ல் இந்திரா உணவகங்கள் திறக்கப்பட்டன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த உணவகங்களின் தற்போ தைய நிலை குறித்து, பா.ஜ., உறுப்பினர் நவீன் மேலவையில் நேற்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நகராட்சித்துறை அமைச்சர் ரஹீம் கான் அளித்த பதில்:
இந்திரா உணவகம் திட்டம் முதல்வர் சித்தராமையாவின் கனவு திட்டங்களில் ஒன்றாகும்.
தற்போது, மாநிலத்தில் மொத்தம், 346 இந்திரா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 15 உணவகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 22 உணவகங்களின் கட்டுமானம் முடிவடைந்து ஆறு மாதங்களாகி விட்டது. ஆனால், இன்னும் திறப்பு விழா நடத்தப்படாமல் இருக்கிறது.
ஏனெனில், கடந்த ஆறு மாதங்களாக உணவகங்கள் உள்ள பகுதிகளில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் யாரும், திறப்பு விழாவுக்கு வர தேதி தரவில்லை.
அதனால், உணவகங்கள் மூடியே கிடக்கின்றன. இது தொடர்பாக, நான் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன்.
அவர்களிடம் உணவகங்களை திறக்க தேதியும், நேரமும் ஒதுக்குங்கள் என்று கோரி உள்ளேன். இந்த மாதம் உணவகங்களை திறந்து வைப்போம் என, எம்.எல்.ஏ.,க்கள் உறுதியளித்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
