ADDED : டிச 12, 2025 06:39 AM
தேவனஹள்ளி: தடுப்பு சுவரில் மோதி சாலையின் மறுபக்கம் வந்த கார், அரசு பஸ் மீது மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தேவனஹள்ளி தாலுகா லாலகொண்டனஹள்ளி கேட் பகுதியில், பெங்களூரு - பல்லாரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு ஒரு கார் வேகமாக சென்றது.
திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி, சாலை தடுப்பு சுவரில் மோதி மறுபக்க சாலைக்கு வந்தது. அந்த வழியாக சென்ற அரசு பஸ்சின் முன்பக்கத்தில் மோதியது.
மோதிய வேகத்தில் கார் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. தகவல் அறிந்த தேவனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். காருக்குள் இருந்த மூன்று பேரும் உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
போலீஸ் விசாரணையில், உயிரிழந்தவர்கள் தேவனஹள்ளி அருகே சதனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மோகன் குமார், 33, சுமன், 28, சாகர், 23 என்பது தெரிந்தது. இவர்கள் மூன்று பேரும், சொந்த வேலையாக சிக்கபல்லாபூர் சென்று விட்டு ஊர் திரும்பிய போது விபத்து நடந்தது தெரிந்தது.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. துாக்க கலக்கத்தில் காரை ஓட்டி வந்ததால் விபத்து நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். விசாரணை நடக்கிறது.
