/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தெருநாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி
/
தெருநாய்கள் கடித்து 35 ஆடுகள் பலி
ADDED : ஜன 31, 2026 05:14 AM

தங்கவயல்: தெருநாய்கள் கடித்து குதறியதில், 35 ஆடுகள் பலியாயின. 10 ஆடுகள் காயமடைந்தன.
பேத்தமங்களா -- வி.கோட்டா நெடுஞ்சாலையில், தொட்டக்காரி என்ற கிராமத்தில் ஜில்லா பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் சாஹித்யா என்பவருக்கு சொந்தமான கொட்டகை உள்ளது. இந்த கொட்டகையில், சீனப்பா என்பவர் தனக்கு சொந்தமான, 45 ஆடுகளை இரவில் அடைப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு தெருநாய் கும்பல், கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறியது. இதில், 35 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 10 ஆடுகள் படுகாயம் அடைந்தன.
நேற்று அதிகாலையில் தகவல் அறிந்த சீனப்பா, சம்பவ இடத்துக்கு சென்றார். ஆடுகள் இறந்து கிடந்த கோரக்காட்சியை கண்டார்; திடுக்கிட்டார். இந்த ஆடுகளால் தான், என் வாழ்க்கை நடந்தது. இப்படி நடந்து விட்டதே என்று கண்ணீர் விட்டு அழுதார்.
கால்நடை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மருத்துவ அதிகாரி திருமூர்த்தி நாயக் தலைமையில் குழுவினர் பார்வையிட்டனர். படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆட்டின் உரிமையாளருக்கு நிவாரண உதவி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தெருநாய்களை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர்.

