அடகு வைக்கப்படும் கார்களை விற்ற 4 புரோக்கர்கள் கைது
அடகு வைக்கப்படும் கார்களை விற்ற 4 புரோக்கர்கள் கைது
ADDED : ஜூலை 29, 2026 02:51 AM
ஆடுகோடி: அடகு வைக்கப்படும் கார்களுக்கு போலி வாகன பதிவெண் பொருத்தி விற்பனை செய்த கார் புரோக்கர்கள், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு ஆடுகோடியை சேர்ந்தவர்கள் பிரபாகர், வேணு கவுடா, பிரசாந்த், பாகேஷ். இவர்கள் நான்கு பேரும் கார் புரோக்கர்கள். அவசர தேவைக்கு கார்களை அடகு வைக்க நினைப்போரை தொடர்பு கொண்டு, கார்களை அடகு வைத்து பணம் வாங்கி கொடுக்கும் தொழில் செய்தனர்.
இந்நிலையில், எலக்ட்ரானிக் சிட்டியில் வசிக்கும் ஐ.டி., ஊழியர் ஒருவர், அவசர பண தேவைக்காக தனது காரை அடகு வைக்க, இந்த புரோக்கர்கள் உதவியை நாடினார்.
காரை வாங்கி சென்ற நான்கு பேரும், ஐ.டி., ஊழியருக்கு பணம் கொடுக்கவில்லை. காரையும் திரும்ப கொடுக்காமல் இழுத்தடித்தனர்.
இதுகுறித்து ஐ.டி., ஊழியர் ஆடுகோடி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது புரோக்கர்கள் நான்கு பேரும், தங்களிடம் விற்பனைக்காக வரும் கார்களின் உண்மையான வாகன பதிவெண்ணை கழற்றி விட்டு, போலியான வாகன பதிவெண்ணை பொருத்துவது வழக்கம்.
அந்த கார்கள் மீது போலி ஆர்.சி., போன்ற ஆவணங்களை உருவாக்கி, கார் தங்களுடையது என்று கூறி மற்றவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து, அந்த நான்கு பேரையும் நேற்று முன்தினம் ஆடுகோடி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 1.74 கோடி ரூபாய் மதிப்பிலான, எட்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
