ADDED : நவ 03, 2025 05:09 AM

மாண்டியா: மாண்டியாவில் கால்வாயில் தவறி விழுந்த சிறுமியை காப்பாற்ற முயற்சித்த, நான்கு சிறுவர் - சிறுமியர் உயிரிழந்தனர்.
மைசூரு சாந்தி நகரில் உள்ள முஸ்லிம் மதரசாவை சேர்ந்த 15 மாணவ - மாணவியர், ஒரு ஆசிரியர் ஆகியோர் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவின் மாண்டியாகொப்பலு கிராமத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர்.
இதில், சில மாணவ - மாணவியர், இங்குள்ள ஸ்ரீகாவிரி போரேதேவரா கோவில் அருகில் உள்ள கால்வாய் பகுதிக்கு வந்தனர். அப்ரீன், 13, என்ற சிறுமி, தனது துணியை சுத்தம் செய்ய, கால்வாயில் இறங்க முயற்சித்தார். அப்போது, தவறி விழுந்தார்.
அவரை காப்பாற்ற முயற்சித்து சில மாணவ - மாணவியர் குதித்தனர்; அவர்களும் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்த ஆசிரியர், அங்கிருந்த மாணவர்கள் அலறினர். அவ்வழியாக சென்றவர்களில் சிலர் கால்வாயில் குதித்து, முகமது அயாஸ், 13, ஆயிஷா, 13, ஆகியோரை மீட்டனர்.
மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி ஆயிஷா உயிரிழந்தார். நீரில் மூழ்கிய ஹனி, 14, என்ற சிறுமியின் உடலை நேற்று காலையில் மீட்டனர். முதலில் தண்ணீரில் மூழ்கிய அப்ரீன், 13, மற்றும் ஜானியா பர்வீன், 13, ஆகியோரின் உடல்களை, அப்பகுதியில் இருந்து 7 கி.மீ., துாரத்தில் தீயணைப்பு படையினர் மீட்டனர்.
அரகெரே போலீசார் விசாரிக்கின்றனர்.
