ADDED : செப் 11, 2025 11:05 PM
கோலார்: கோலார் மாவட்ட எஸ்.என்.ஆர்., அரசு மருத்துவமனையில் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள செயற்கை சுவாச கருவிகள் மாயமாகி உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, பலருக்கு செயற்கை சுவாச கருவிகள் தேவை இருந்தது. இதனால், கோலார் மாவட்ட எஸ்.என்.ஆர்., மருத்துவமனைக்கு 5 கோடி ரூபாய் மதிப்பில் 70 செயற்கை சுவாச கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியது. அப்போது பலரின் உயிரை காப்பாற்ற, அவை பயன்பட்டன.
கொரோனாவுக்கு பின் பயன்பாடு குறைந்ததால், அவை குடோனில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் அவற்றில் 40 வென்டிலேட்டர் மாயமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவை எப்படி மாயமானது, அவற்றை தனியாரிடம் விற்றுவிட்டனரா, இந்த கூட்டுச்சதியில் யார் யாருக்கெல்லாம் பங்கு உள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக, மருத்துவமனையில் இருந்து எந்த பதிலும் இல்லை.
