4,000 பி.பி.எல்., ரேஷன் அட்டை தங்கவயலில் ரத்து: பா.ஜ., புகார்
4,000 பி.பி.எல்., ரேஷன் அட்டை தங்கவயலில் ரத்து: பா.ஜ., புகார்
ADDED : ஜூலை 22, 2026 11:24 PM
தங்கவயல்: தங்கவயலில் 4,000 குடும்பங்களின் பி.பி.எல்., ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது.
தங்கவயல் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., சம்பங்கி நேற்று அளித்த பேட்டி:
தங்கவயலில் எட்டு ஆண்டுகளாக வளர்ச்சி பணி நடக்கவில்லை. இதுபற்றி கேள்வி கேட்டால் எதிர்க்கட்சிகள் தான் பணிகள் நடக்கவிடாமல் தடுக்கின்றனர் என்று, காங்கிரசார் ஒப்பாரி வைக்கின்றனர். ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்ததால், காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது.
ஆனால் அவர்களால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. இதை சட்டசபையில் ஒப்பு கொண்டனர்.
தங்கவயலில் முதியோர், விதவைகள் என 14,000 பேருக்கு கிடைத்த பென்ஷனை ரத்து செய்துள்ளனர்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 4,000 குடும்பங்களிடம் இருந்த பி.பி.எல்., ரேஷன் அட்டைகளை ரத்து செய்துள்ளனர்.
இது தான் எம்.எல்.ஏ., ரூபகலாவின் சாதனையா?
தனது தந்தை முனியப்பா தான் உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சராக உள்ளார் என்பது, ரூபகலாவுக்கு நினைவு இல்லையா? உங்களை வெற்றி பெற வைத்த மக்களை கஷ்டப்படுத்தாதீர்கள்.
மக்கள் விரோத போக்குடன் நடந்து கொண்டால், பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
