ADDED : மே 13, 2025 11:58 PM
தங்கவயல் : தங்கவயலில் சமையல் காஸ் சிலிண்டர்களை, சட்டவிரோதமாக, 'ரீ பில்லிங்' செய்து முறைகேடாக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
தங்கவயலில் பல இடங்களில் காஸ் ஏஜென்சிகளிடம் இருந்து சமையல் எரிவாயு எனும் காஸ் சிலிண்டர்களை வாங்கி, அதனை ரீ பில்லிங் செய்து 1 கிலோ, 2 கிலோ என சிலர் விற்பனை செய்கின்றனர்.
தங்கவயலில் ஆயிரம் ஆட்டோக்கள், 'காஸ்' மூலம் இயக்கப்படுகின்றன. இவர்கள் பெரும்பாலும், காஸ் ரீ பில்லிங் செய்து, விற்பனை செய்பவர்களிடமே வாங்குகின்றனர். இச்செயல் மிகுந்த ஆபத்தானது என்பதை உணராமல் குடியிருப்பு பகுதியில், வர்த்தக நிலையங்கள் உள்ள இடங்களிலேயே வியாபாரம் செய்து வருகின்றனர்.
உரிய அனுமதியின்றி காஸ் விற்பனை செய்வதாக பல புகார்கள் சென்றாலும், அதன் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
நேற்று முன்தினம் கோலார் மாவட்ட உணவுத் துறை உதவி இயக்குனர் மல்லிகார்ஜூனா தலைமையில் தங்கவயலில் உரிகம் பகுதியில், காஸ் ரீ பில்லிங் செய்யும் இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைத்திருந்த 218 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஷேக் இனாயத், 20, அஜீம், 25, கபீர், 25, சுதீப் 22, கர்னலிஸ், 29, இன்சுக், 27 ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய நபர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே, 2024ல், ஆண்டர்சன்பேட்டையில் சட்டவிரோதமாக 350 சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்ததை உணவுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
