ADDED : ஜூன் 01, 2026 12:13 AM

உத்தரகன்னடா: கடலில் மீன் பிடிக்கும் போது, எதிர்பாராமல் படகு கவிழ்ந்தது. அதில் இருந்த ஏழு மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உத்தரகன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகாவின் பெலம்பாரா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் கார்வி. இவருக்கு சொந்தமான, 'ஸ்ரீநவரத்னா' என்ற பெயர் கொண்ட படகு, நேற்று காலையில் ஹொன்னாவரா தாலுகாவின், தாரெபாகிலு அருகில் உள்ள கடலில், மீன்பிடிக்க புறப்பட்டது. அதில் ஏழு மீனவர்கள் இருந்தனர்.
கடலின் ஆழத்துக்கு செல்லும் போது, படகு சேதம் அடைந்ததால், பெருமளவில் தண்ணீர் புகுந்தது. தடுக்க முடியாத அளவுக்கு தண்ணீர் புகுந்ததால், அலைகளின் ஆர்ப்பரிப்பில் படகு சிக்கி நீரில் மூழ்கியது.
அதே பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் கவனித்தனர். அவர்களில் சிலர், தாமதிக்காமல் நீரில் குதித்து, ஏழு மீனவர்களை காப்பாற்றி, தங்களின் படகில் கரைக்கு அழைத்து வந்தனர்.
தகவலறிந்த கடலோர பாதுகாப்பு படையினர், அங்கு வந்து காப்பாற்றப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தி, தகவல் கேட்டறிந்தனர்.
