ADDED : ஜூலை 07, 2026 04:01 AM
ஷிவமொக்கா: பஸ் நிலையத்தில் கைப்பையில் வைக்கப்பட்டு இருந்த பச்சிளம் பெண் குழந்தையை, பொது மக்கள் பராமரித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஷிவமொக்கா மாவட்டம், ஹொசநகர் தாலுகாவின், ரிப்பன்பேட் அருகில் கவடூர் கிராமம் உள்ளது. இங்குள்ள பஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், நீண்ட நேரமாக குழந்தையின் அழுகுரல் கேட்டது.
பஸ் நிலையத்தின் பின் பகுதியில், ஒரு கைப்பை கிடந்தது. அதில் பார்த்த போது, துணியால் சுற்றப்பட்டு, பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பது தெரிந்தது. அதன் அருகில் பால் பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த ரிப்பன்பேட் போலீசார், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
குழந்தை, 1.6 கிலோ எடை உள்ளது. பிறந்து, 10 முதல் 15 நாட்கள் ஆகியிருக்கலாம் என, டாக்டர்கள் கூறினர். தற்போது, ஷிவமொக்காவின் மெக்கான் மருத்துவமனையில், டாக்டர்களின் பராமரிப்பில் குழந்தை உள்ளது.
பெண் குழந்தை என்பதால் பெற்றோர் விட்டு சென்றனரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது தெரியவில்லை. குழந்தையின் பெற்றோரை போலீசார் தேடுகின்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை, ஆய்வு செய்கின்றனர்.
'குழந்தையை வளர்க்க முடியவில்லை என்றால், யாருக்காவது தத்து கொடுத்திருக்கலாம் அல்லது அரசின் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்திருக்கலாம்.
'அதை செய்யாமல் கைப்பையில் குழந்தையை வைத்து, அலட்சியமாக வீசியுள்ள பெற்றோரை பொது மக்கள் கண்டித்துள்ளனர். இவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்துகின்றனர்.
