பாக்குகளை தரம் பிரிக்கும் இயந்திரம் உருவாக்கிய மாணவி
பாக்குகளை தரம் பிரிக்கும் இயந்திரம் உருவாக்கிய மாணவி
ADDED : ஆக 30, 2026 11:23 PM

- நமது நிருபர் -:
விவசாய பயன்பாடு, பாரம்பரிய நடைமுறைகளுக்கு ஷிவமொக்கா மாவட்டம், தீர்த்தஹள்ளி பெயர் பெற்றது. மலைப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பாக்கு மிகவும் முக்கியமான வணிக பயிராகும்.
இந்தியாவில் பாக்கு உற்பத்தியில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. சமீப காலமாக, பாக்குகளை பறித்து, கொட்டைகளை தரம் பிரிக்க விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதை சமாளிக்க, நவீன தொழில்நுட்பத்தின் பயன்பாடு இன்றியமையாதது.
பாக்கு அறுவடைக்கு நார், கார்பனால் ஆன இலகுரக கம்பிகளும், தோல் உரிக்கும் இயந்திரங்களும் பயன்பாட்டில் உள்ளன.
இவை விவசாய நடவடிக்கைகளை ஓரளவுக்கு எளிதாக்குகின்றன. இருப்பினும், தோலுரித்த கொட்டைகளின் தரத்தின் அடிப்படையில் கைகளால் ஹசா, பெட்டே, ராஷி இடி, கோரபாலு என, நான்கு வகையாக பிரிப்பது மிகவும் கடினம். இதற்கு அதிக நேரம் செலவாகும். இந்த பிரச்னைக்கு தொழில்நுட்பம் மூலம், பிரசன்ன ஹோலா - சமஸ்கிருத பேராசிரியை பிரபா ஹோலா தம்பதி மகளான அனர்க்யா, தீர்வு கண்டுள்ளார். சேவா பாரதி பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் அவர், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு மூலம் பாக்கு தரம் பிரிக்கும் இயந்திரத்தின் முன் மாதிரியை உருவாக்கி உள்ளார்.
இந்த இயந்திரம் தானியங்கி மூலம் செயல்படுகிறது.
தற்போது செயல் விளக்கத்துக்காக உருவாக்கப்பட்டு உள்ள இந்த சிறிய மாதிரி இயந்திரம், விவசாயத்தில் நடைமுறைக்கு உகந்ததாகும். எதிர்காலத்தில் தொழில்முறை பார்வை கேமரா, அதிவேக செயலி, காற்று ஊதும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பெரிய அளவில் உருவாக்கப்பட்டால் ஒரு மணி நேரத்தில், நுாற்றுக்கணக்கான கிலோ கொட்டைகளை, சில வினாடிகளில் தரம் பிரிக்கும் திறன் அமையும்.
பாக்கு விவசாயிகள் பிரச்னைக்கு நவீன தீர்வை கண்டறிந்த அனர்க்காவின் இம் முயற்சி, மலைப்பகுதி விவசாயிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையாக அமைந்து உள்ளது. தனக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள், பெற்றோருக்கு மாணவி நன்றி தெரிவித்து உள்ளார்.
