விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இரண்டரை மணி நேரம் நீடித்த பதற்றம்
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இரண்டரை மணி நேரம் நீடித்த பதற்றம்
ADDED : ஏப் 23, 2026 04:21 AM

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளிக்கு சென்ற, 'பிளை 91 ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பதற்றமான சூழ்நிலை உருவானது.
பெங்களூரில் இருந்து, 'பிளை 91 ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் விமானம், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, ஹூப்பள்ளிக்கு புறப்பட்டது. நிர்ணயித்தபடி 6:50 மணிக்கு ஹூப்பள்ளியை அடைந்திருக்க வேண்டும். அதன்படி ஹூப்பள்ளியை அடைந்தது என்றாலும், தரையிறங்க முடியவில்லை.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், தரையிறங்க முடியாமல், மீண்டும் மேலே பறந்து வானத்தை வட்டமடித்தது. கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் வானத்தில் வட்டமடித்த விமானம் ஒரு வழியாக, 9:15 மணிக்கு பாதுகாப்பாக, ஹூப்பள்ளி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதுவரை பயணியர் உயிரை கையில் பிடித்தபடி, நடுக்கத்துடன் அமர்ந்திருந்தனர். தரையிறங்கியதும் அவசர, அவசரமாக விமானத்தில் இருந்து இறங்கி சென்றனர்.
இதே ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், ஏப்ரல் 19ல், ஹைதராபாத்தில் இருந்து, ஹூப்பள்ளிக்கு செல்லும் போது, மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல், நான்கு மணி நேரம் விமானத்தில் வட்டமடித்து, பயணியரை அச்சுறுத்தியது. அதன்பின் பெங்களூரில் தரையிறங்கியது.
ஹூப்பள்ளி விமான நிலையத்தில் தரையிறங்குவதில், தொடர்ந்து பிரச்னையை சந்திக்கிறது. மற்ற விமானங்கள் சுமுகமாக பறக்கின்றன; தரையிறங்குகின்றன. பிளை 91 ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்துக்கு மட்டுமே, ஏன் பிரச்னை ஏற்படுவது ஏன் என, பயணியர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஹூப்பள்ளி - பெங்களூரு மற்றும் ஹூப்பள்ளி - ஹைதராபாத் இடையே, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில், பிளை 91 ஏர்லைன்ஸ் நிறுவனம், விமான போக்குவரத்தை துவக்கியது. இதனால் வர்த்தகத்துக்கு உதவியாக இருக்கும் என, பயணியர் எதிர்பார்த்தனர். ஆனால் விமானம் அவ்வப்போது தொழிற்நுட்ப கோளாறு உட்பட பல பிரச்னைகளை சந்திக்கிறது. எனவே, இந்நிறுவன விமானம் மீது பயணியர் நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
