/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டும் பெண்
/
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் ஈட்டும் பெண்
ADDED : பிப் 23, 2026 04:43 AM

- நமது நிருபர் -
ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஊடு பயிரிட்டு ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி, மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக பெண் ஒருவர் திகழ்ந்து வருகிறார்.
விஜயபுரா மாவட்டம், பசவனபாகேவாடி தாலுகாவின் பல்லாவூர் தாண்டாவை சேர்ந்தவர் சுனிதா. குறைந்த நிலத்தில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில், முற்போக்கு விவசாயியான இவர், தன் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன், மூன்று ஆண்டுகளுக்கு முன், தனது ஒன்றரை ஏக்கர் திராட்சை நிலத்தில், 350 சந்தன மரங்களையும், 400 மகோகனி மரங்களையும் நட்டுள்ளார்.
மழையின்றி விளைச்சல் பாழாகாமல் இருக்க சொட்டு நீர்ப்பாசனத்தை பயன்படுத்தி, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார். இது தவிர, சந்தன மரம், மகோகனி மரங்களுக்கு இடையே ஊடு பயிராக, பாகற்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கறிவேப்பிலை, ரோஜா செடிகள், பேரிக்காய், பலாப்பழம், சீதாப்பழ மரங்களையும் வளர்க்கிறார்.
விளைச் சல்களுக்கு ஆதாரமாக, இரண்டு ஆழ்துளை கிணறுகள், 30க்கு 30 மீட்டரில் சிறிய விவசாய குழு, இரண்டு மண்புழு உரம் தயாரிக்கும் மையம், தீவன கொட்டகை, விவசாய இயந்திரங்கள் வைத்து உள்ளார்.
மரங்கள் வளர்ந்து லாபம் தரும் வரை, ஊடுபயிர்கள், கால்நடை வளர்ப்பிலும் பணம் சம்பாதிக்கிறார். தற்போது, 30 செம்மறி ஆடுகள், 20 வெள்ளாடுகள், 50 கோழிகள், இரண்டு பசுக்களை வளர்த்து வருகிறார். இவைகளுக்காக தனித்தனி கொட்டகையும் கட்டி உள்ளார். ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறார். அடுத்தாண்டு கருப்பு மிளகு, சேனைக்கிழங்கு பயிரிட திட்டமிட்டு உள்ளார்.
சந்தன மரம், மகோகனி மரங்கள் வளர்ந்தால், அதிக லாபம் கிடைக்கும். இது தவிர, மற்றவர்களின் நிலத்திலும் காய்கறிகளை பயிரிட்டு, லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார்.
என் விவசாய பணிக்கு கணவரும், குடும்பத்தினரும் முதுகெலும்பாக உள்ளனர். சந்தன மரம், மகோகனி மரம் வளரும் வரை, வாழை, காய்கறிகள், கால்நடை விவசாயம் மூலம் தினசரி வருவாய் கிடைத்து வருகிறது. - சுனிதா, விவசாயி

