/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'குடி'யை நிறுத்திய வாலிபர் வீடு வீடாக சென்று பிரசாரம்
/
'குடி'யை நிறுத்திய வாலிபர் வீடு வீடாக சென்று பிரசாரம்
'குடி'யை நிறுத்திய வாலிபர் வீடு வீடாக சென்று பிரசாரம்
'குடி'யை நிறுத்திய வாலிபர் வீடு வீடாக சென்று பிரசாரம்
ADDED : நவ 27, 2025 07:15 AM

மாண்டியா: குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்ட வாலிபர் ஒருவர், அந்த மகிழ்ச்சியை கொண்டாட கிராமத்தினருக்கு கோழியும், இனிப்பும் வழங்கினார். மது ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறார்.
மாண்டியா நகரின் பசராளு கிராமத்தில் வசிப்பவர் கிரண்குமார், 28. இவர், சில ஆண்டுகளாக, குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார்.
தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்தார். பெற்றோரும், கிராமத்தினரும் பல முறை அறிவுரை கூறியும் பலன் இல்லை.
இதற்கிடையே குடிப்பழக்கத்தால் பல குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளை கண்ட அவரது மனம், மாற துவங்கியது.
குடிப்பழக்கம் வாழ்க்கையை பாழாக்கும் என்பதை உணர்ந்து, அதை விட முயற்சித்தார். படிப்படியாக முற்றிலும் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டார். இது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது.
அவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். குடிப்பழக்கத்தில் இருந்து, தான் விடுபட்டதையும், பிறந்த நாளையும் கொண்டாடும் வகையில், கிராமத்தில் வீடு வீடாக சென்று, கோழியும், இனிப்பும் வழங்கினார்.
அதுமட்டுமின்றி, குடிப்பழக்கத்தால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து, கிராமத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிரசாரமும் செய்கிறார்.
அவரது மனமாற்றத்தை பாராட்டிய கிராமத்தினர், நல்ல முறையில் வாழும்படி வாழ்த்தினர்.
கிரண்குமார் கூறியதாவது:
குடிப்பழக்கம் மிகவும் மோசமானது. இந்த பழக்கத்தால் பல குடும்பங்கள் வீதிக்கு வந்து உள்ளன.
தவறான பழக்கத்தால், வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து, மனம் நொந்துள்ளேன். இதை விட்டொழித்தது நிம்மதி அளிக்கிறது.
என் மகிழ்ச்சியை கிராமத்தினருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். கிராமத்தினருக்கு கோழியும், இனிப்பும் வழங்கினேன். 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முழு கோழியும், அசைவம் சாப்பிடாத 70 வீடுகளுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கினேன். குடிப் பழக்கத்துக்கு எதிராக பிரசாரமும் செய்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

