/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமண மண்டபத்தில் ரகளை; இளம்பெண்ணால் பரபரப்பு
/
திருமண மண்டபத்தில் ரகளை; இளம்பெண்ணால் பரபரப்பு
ADDED : டிச 15, 2025 05:24 AM

சிக்கமகளூரு: முன்னாள் காதலி எனக்கூறி திருமண மண்டபத்தில் ரகளை செய்த இளம்பெண்ணால் பரபரப்பு நிலவியது.
சிக்கமகளூரு நகரில் உள்ள மண்டபத்தில் நேற்று சரத், 29, என்பவருக்கு திருமணம் நடந்தது. மணப்பெண்ணுக்கு தாலி கட்டிய சில நிமிடங்களில் பரபரப்பு காணப்பட்டது. மண்டபத்திற்குள் முகத்தை மூடியவாறு ஒரு இளம் பெண் வந்தார்.
தன்னை ஹாசன் மாவட்டம், பேலுாரை சேர்ந்த அஸ்வினி என அறிமுகப்படுத்தி கொண்டார்.
'மணமகன் சரத், தன்னை 10 ஆண்டுகள் காதலித்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். எனவே இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என கூச்சலிட்டார்.
இதை பார்த்த மணமகன், 'அப்பெண் யார் என தெரியாதது. ஏதோ பைத்தியம் போல இருக்கிறார்' என்றார். அப்பெண்ணை மண்டபத்தில் இருந்து வெளியேற்ற உறவினர்கள் முயன்றனர்.
ஆனால், அவர் வெளியேற மறுத்து, மண்டபத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்.
இதனால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார், உறவினர்களின் உதவியுடன் வெளியே அழைத்து சென்றனர்.
இது குறித்து, அப்பெண் கூறியதாவது:
நாங்கள் இருவரும் காதலர்கள். சரத் என்னை ஏமாற்றி விட்டார். இருப்பினும், அவரை திருமணம் செய்யவே விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறும் வரை போராடுவேன்.
நான் வருவதற்குள் அவசர, அவசரமாக திருமணம் நடத்தப்பட்டது. சரத்தின் வீட்டார் எனக்கு பணம் தருவதாக கூறினர். எனக்கு பணம் வேண்டாம்; சரத் தான் வேண்டும் என கூறினேன்.
நேற்று முன்தினம் கூட, அவரது வீட்டின் முன் தனியாக போராட்டம் நடத்தினேன்.
அப்போது, அவரது உறவினர்கள் என்னை அடித்து அப்புறப்படுத்தினர். 8 மாதங்களுக்கு முன்பே, அலலுார் போலீஸ் நிலையத்தில், சரத் மீது புகார் செய்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

