கொலை வழக்கில் தேடப்படும் ரவுடியுடன் நடிகை ரசிதா ராம்
கொலை வழக்கில் தேடப்படும் ரவுடியுடன் நடிகை ரசிதா ராம்
ADDED : ஜூலை 22, 2025 04:51 AM
பெங்களூரு: கொலையான ரவுடி சிவகுமார் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியுடன், நடிகை ரசிதா ராம் எடுத்துக் கொண்ட படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெங்களூரு பாரதி நகரை சேர்ந்த ரவுடி சிவகுமார், 46. ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்த இவர், இம்மாதம் 15ம் தேதி, தன் வீட்டு அருகில் உள்ள ஹோட்டல் முன் நின்று, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த கும்பல், சிவகுமாரை சூழ்ந்து கொண்டு அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டி செய்து விட்டு தப்பினர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை தொடர்பாக பாரதி நகர் போலீசார், விசாரிக்கின்றனர். இதில் கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ், அவரது ஆதரவாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவானது.
சிவகுமார் கொலையில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான ஜெகதீஷுடன், நடிகை ரசிதா ராம் இருக்கும் படம், சமூக வலைதளங்களில், நேற்று பரவியது. ஜெகதீஷ், நடிகை ரசிதா ராமுக்கு தங்க நகைகள், பட்டுச்சேலை பரிசளித்ததாக கூறப்படும் படம் இதுவாகும். இதில் மூத்த நடிகர் ரவிசந்திரனும் இருக்கிறார்.
பாரதி நகர் போலீசார், ஏற்கனவே பைரதி பசவராஜ் உட்பட, பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியுடன் நடிகை ரசிதா ராம் நின்றுள்ளதால், இவரையும் விசாரணைக்கு அழைக்கலாம் என, போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
