அதானி நிறுவனத்துக்கு சுரங்க சாலை பணி அரசிடம் அனுமதி கோருகிறது 'பி- - ஸ்மைல்'
அதானி நிறுவனத்துக்கு சுரங்க சாலை பணி அரசிடம் அனுமதி கோருகிறது 'பி- - ஸ்மைல்'
ADDED : ஜூன் 03, 2026 10:54 PM
பெங்களூரு: பெங்களூரில் அமைக்கப்படும், 17 கி.மீ., சுரங்க சாலை திட்டத்தின் ஒப்பந்தத்தை, அதானி நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பான கோப்புகளை, 'பி - ஸ்மைல்' எனும், 'பெங்களூரு ஸ்மார்ட் இன்பாஸ்ட்ரக்ஷன் லிமிடெட்' நிறுவனம், மாநில அரசுக்கு அனுப்பியுள்ளது.
இது குறித்து, பி - ஸ்மைல் அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடிக்கு, தீர்வு காணும் நோக்கில், சில்க்போர்டில் இருந்து, ஹெப்பால் வரையிலான 17 கி.மீ., தொலைவில், சுரங்க சாலை அமைக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதை செயல்படுத்தும் பொறுப்பை பி - ஸ்மைல் ஏற்றுள்ளது. திட்டத்தை செயல்படுத்த, பி - ஸ்மைல் டெண்டர் அழைத்தது.
இதில் மற்ற நிறுவனங்களை விட, குறைந்த தொகை குறிப்பிட்டிருந்த, அதானி நிறுவனத்துக்கு, டெண்டர் அளிக்க அரசின் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்துக்கு டெண்டர் அளிப்பது தொடர்பான கோப்புகளை, பி - ஸ்மைல் நிறுவனம் மாநில அரசுக்கு அனுப்பியது. சுரங்க சாலை திட்டத்துக்கு, 17,698 கோடி ரூபாய் செலவாகலாம் என, அரசு மதிப்பிட்டது.
ஆனால், அதானி நிறுவனம், 22,267 கோடி ரூபாய் குறிப்பிட்டுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையை விட, 4,600 கோடி ரூபாய் கூடுதல் தொகையை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான, கோப்புகளை மாநில அரசுக்கு, பி - ஸ்மைல் நிறுவனம் அனுப்பியுள்ளது. கோப்புகளை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்து, ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்.
ஒருவேளை சுரங்கம் அமைக்கும் திட்ட பணிகள், அதானி நிறுவனத்துக்கு டெண்டர் அளிக்க முடிவு செய்யப்பட்டால், இந்த நிறுவனம் சுரங்க சாலை அமைக்கும். 30 ஆண்டுகள் வரை, அந்நிறுவனமே சுரங்க சாலையை நிர்வகிக்கும். திட்ட செலவில் 40 சதவீதம் தொகையை, மாநில அரசு வழங்கும்.
இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.
