/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆஸ்துமாவை குணமாக்கும் ஆதி நாதேஸ்வரா
/
ஆஸ்துமாவை குணமாக்கும் ஆதி நாதேஸ்வரா
ADDED : ஏப் 01, 2025 07:52 AM

பொதுவாக கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தால், புண்ணியம் கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கஷ்டங்களை மட்டுமல்ல, நோய்களை குணமாக்கும் கோவில்களும் உள்ளன.
கடலோர மாவட்டத்தின், கோவில் ஒன்றில் குடிகொண்டுள்ள ஆதி நாதேஸ்வரர், ஆஸ்துமாவை குணமாக்கும் சக்தி கொண்டவர். டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்றாலும் முழுமையாக குணம் ஆவதில்லை. குளிர்க்காலம், மழைக்காலம் என, அனைத்து பருவ காலத்திலும் அவதிப்படுத்தும். இத்தகைய மக்களுக்கு ஆபத்பாந்தவனாக ஆதி நாதேஸ்வரா விளங்குகிறார்.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரு புறநகரின், ஆத்யபாடி கிராமத்தில் ஆதி நாதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஆஸ்துமா, வயிற்று உப்புசம், நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் குணமடைகின்றனர். கோவிலில் தரிசனம் செய்து வேண்டினால், சந்தன பிரசாதம் கொடுப்பர். இதை குறிப்பிட்ட நாட்கள் வரை சாப்பிட வேண்டும். அதுவரை இறைச்சி சாப்பிடாமல், மதுபானம் குடிக்காமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அப்படி செய்தால் நாளடைவில் ஆஸ்துமா குணமாகும்.
குணமடைந்த பின் வெள்ளி கம்பி, ஒரு கிலோ மிளகு, பூசணிக்காய் காணிக்கை செலுத்த வேண்டும். இதுவரை ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து குணமடைந்து உள்ளனர். மலை மீது இக்கோவில் அமைந்துள்ளது. செம்மண் பாறையில் இருந்து, இயற்கையாக பாயும் நீரூற்று தீர்த்த பிரசாதமாக வழங்கப்படுகிறது.
சமீபத்தில் கோவில், கோடிக்கணக்கான ரூபாய் செலவில், சீரமைக்கப்பட்டு பிரம்ம களசோற்சவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.