ADDED : ஏப் 02, 2026 03:00 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியில் ஏராளமான கடற்கரைகள், சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. இங்கு ஏராளமான தீவுகளும் உண்டு. ஆனால், குறிப்பிட்ட தீவுகளைத் தவிர மற்ற தீவுகளில் சுற்றுலாக்களுக்கு அனுமதி கிடையாது. அப்படி அனுமதி வழங்கப்படும் தீவுகளில், 'மட்டு' தீவும் ஒன்றாகும்.
இந்த தீவில் சுற்றுலாவுக்கு கடந்த ஆண்டு தான் அனுமதி கிடைத்தது. இங்கு ஒரு நாளைக்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். இந்த தீவுக்கு வருவதற்கு ஒரு நபருக்கு 2,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மல்பே கடற்கரையில் இருந்து இன்ஜின் படகு மூலம் பயணியர் அழைத்து செல்லப்படுவர்.
பயணியர் அனைவருக்கும் லைப் ஜாக்கெட்டுகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும். படகில் போகும் போது மீன் கூட்டங்களை பார்த்து ரசிக்கலாம். தீவில் தண்ணீர் பாட்டில், பிஸ்கட் ஆகியவையும் விற்கப்படுகின்றன.
தீவை நெருங்கியவுடன் சிறிய வகை, 'கயாகிங்' படகுகள் தரப்படும். இந்த படகுகளில் இரண்டு பேர் பயணிக்கலாம். துடுப்புகள் மூலம் நிதானமாக பயணிக்கலாம். பயணியரை மேற்பார்வையிடுவதற்கு காவலுக்கு எப்போதும் படகில் தன்னார்வலர்கள் இருக்கின்றனர்.
மேலும், தீவை சுற்றியுள்ள பகுதிகளில் நிம்மதியாக நீச்சல் போடலாம். தேவையான மருத்துவ உபகரணங்களும் இருக்கின்றன. அதிர்ஷ்டம் இருந்தால் டால்பின் கூட்டம் நீந்தி செல்வதை பார்க்கலாம். 'ஸ்கூபா டைவிங்' எனும் ஆழ்கடலுக்குள் செல்லும் விளையாட்டையும் விளையாடலாம். ஆழ்கடலில் இருக்கும் வண்ண மீன்களை பார்த்து ரசிக்கலாம்.
இதை படங்கள் எடுத்து கொடுப்பதற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். மொத்தத்தில், மட்டு தீவு சுற்றுலா வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். சாகச பிரியர்களுக்கு ஏற்ற இடமாக இருக்கும்.
இந்த தீவுக்கு படகில் மட்டும் தான் போக முடியும்.
