மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் 'ஏ.ஐ., ரோபோ' ஆசிரியை
மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் 'ஏ.ஐ., ரோபோ' ஆசிரியை
ADDED : ஆக 08, 2026 11:56 PM

- நமது நிருபர் -:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரில் கன்னடம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலத்தில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு, அதே மொழியில் தெளிவாக பதிலளிக்கும் ரோபோ ஆசிரியையை, புனித தெரசா ஐ.சி.எஸ்.இ., பள்ளி அமைத்துள்ளது.
'ஐரிஸ்' என பெயரிடப்பட்டு உள்ள இந்த ரோபோ ஆசிரியை, சமீபத்தில் இப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. ஒன்று முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரோபோ ஆசிரியை, பள்ளியின் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் மாணவர்கள், பாடத்திட்டம் தவிர, மற்ற விஷயங்கள் குறித்த சந்தேகங்களுக்கும் பதிலளிக்கிறது.
பாரம்பரிய இந்திய உடை அணிந்திருக்கும் இந்த ரோபோ ஆசிரியை, தனக்கு முன்னால் நிற்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, புன்னகையுடன் கண் சிமிட்டி, தன் கைகளை மாணவர்கள் கைகளுடன் குலுக்கி வரவேற்கிறது.
இந்த 'ரோபோ' சாட் ஜிபிடி தொழில்நுட்பம் மற்றும் செயலிகளை கொண்டு, எப்போதும் இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, நடப்பு நிகழ்வுகள், விண்வெளி அறிவியல், சிக்கலான கணிதங்கள் முதல் இலக்கிய கருத்துகள் வரை கேட்கப்படும் எந்தவொரு கேள்விக்கும் 2 முதல் 3 வினாடிகளில் துல்லியமான பதில்களை வழங்குகிறது.
ஆசிரியர்கள் வகுப்பறையில் கற்பிப்பதையும், மாணவர்கள் எளிமையான முறையில் புரிந்து கொள்ளும் வகையில் பாடம் எடுக்கிறது.இந்த ரோபோவில், 'மொழி செயலாக்க' தொழில்நுட்பம் பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கன்னடம், தமிழ், ஹிந்தி, அல்லது ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளை புரிந்து கொண்டு, அதே மொழியில் தெளிவாக பதிலளிக்கிறது.
புனித தெரசா பள்ளி தலைமை ஆசிரியை சகோதரி லுாட்ஸ் கூறியதாவது:
புனித தெரசா பள்ளியில் செயற்கை நுண்ணறிவு ஆசிரியரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன், நாங்கள் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தை தொடங்கியபோது, இந்த துறையில் நாங்கள் முன்னோடிகளாக இருந்தோம்.
இப்போது செயற்கை நுண்ணறிவு ஆசிரியரின் வருகையால், குழந்தைகளும், ஆசிரியர்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் தொடர்பு கொள்வதும் எளிதாகவும், துல்லியமாகவும் மாறி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு துறை ஆசிரியை வில்சி கூறுகையில், ''எங்கள் பள்ளியில் ஐரிஸ் ரோபோ இருப்பது, மிகவும் உதவியாக உள்ளது. குழந்தைகள் தங்கள் சந்தேகங்களை ஐரிசிடம் கேட்கும்போது, உள்ளூர் மொழி உட்பட பல மொழிகளில் பதிலளிக்கிறது,'' என்றார்.
