காதலியுடன் தகராறு; காரை வெடிக்க செய்து வாலிபர் தற்கொலை
காதலியுடன் தகராறு; காரை வெடிக்க செய்து வாலிபர் தற்கொலை
ADDED : ஜூன் 28, 2026 05:33 AM

துமகூரு: காதலர்கள் இடையே ஏற்பட்ட தகராறில், காருக்குள் பெட்ரோல் குண்டை வெடிக்க செய்து, வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர கன்னடா மாவட்டம், அங்கோலா தாலுகாவின் அகசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா, 30. இவர், வீடுகளுக்கு பொருட்களை வினியோகம் செய்யும் 'டெலிவரி பாயா க ' இருந்தார்.
பெங்களூரின் ஜெயநகரில் பி.ஜி., ஒன்றில் வசிப்பவர் ரம்யா உல்லாஸ், 23. இவர், சஞ்சய்காந்தி மருத்துவமனையில் டெக்னிஷியனாக பணியாற்றுகிறார். இவர்கள் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருந்தாலும் திருமணத்துக்கு ரம்யா மறுத்ததால், நாகேந்திரா கோபத்தில் இருந்தார்.
காதலர் திட்டம் இந்நிலையில், காதலியை, தன் சொந்த ஊருக்கு கடத்தி சென்று, திருமணம் செய்ய நாகேந்திரா திட்டமிட்டார். இதற்காக வாடகை கார் ஏற்பாடு செய்தார். நேற்று காலை 11:00 மணிக்கு, பி.ஜி.,க்கு சென்று, ரம்யாவை பலவந்தமாக காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
காதலர்கள் தங்கள் ஊருக்கு செல்கின்றனர் என, கார் ஓட்டுநர் நினைத்து கொண்டு, அங்கோலாவை நோக்கி சென்றார்.
மதியம் 1:30 மணிக்கு, கார் துமகூரை தாண்டியதும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஆரம்பித்தது. சிரா தாலுகாவின் ஜோகிஹள்ளி அருகில் செல்லும் போது, கோபத்தின் உச்சிக்கு சென்ற நாகேந்திரா, தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்யாவின் தலை, உடலின் சில பகுதிகளில் கண் மூடித்தனமாக குத்தினார். அப்போது நாகேந்திரா, பெட்ரோல் வெடிகுண்டு வைத்திருப்பதை கவனித்த ரம்யா, அலறிய படி, காரில் இருந்து கீழே குதித்தார்.
காரில் தற்கொலை நடந்த சம்பவத்தை பார்த்து, பீதியடைந்த ஓட்டுநர் பிரவீன், இளம்பெண்ணை காப்பாற்றும் நோக்கில், உடனடியாக காரை, சாலையின் ஓரமாக நிறுத்தி கீழே இறங்கினார். ஓட்டுநர் கீழே இறங்கியதும் காரின் அனைத்து கதவுகளையும், உட்புறமாக பூட்டி கொண்ட நாகேந்திரா, காருக்குள்ளேயே பெட்ரோல் வெடிகுண்டை வெடிக்க வைத்து, தற்கொலை செய்து கொண்டார்.
அங்கு சென்ற துமகூரு எஸ்.பி., அசோக் விசாரித்தார். கத்தியால் குத்தப்பட்டும், கீழே குதித்தும் காயமடைந்த ரம்யா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக, கள்ளம்பெல்லா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகேந்திரா, ரம்யா இடையிலான உறவு என்ன; இவர்களுக்குள் தகராறு ஏற்பட, என்ன காரணம்; ரம்யாவை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள, நாகேந்திரா திட்டமிட்டாரா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். எரிந்த காரில் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரம்யா கடத்தப்பட்டது குறித்து, அவரது தோழி சித்தாபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சித்தாபுரா போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். கள்ளம்பெல்லா, சித்தாபுரா என, இரண்டு போலீஸ் நிலைய போலீசாரும் இணைந்து விசாரிக்கின்றனர்.
