சட்டசபையில், சித்தராமையா பேசிய போது, பா.ஜ., உறுப்பினர் சி.சி.பாட்டீல் சத்தமாக ஏப்பம் விட்டார். முதல்வர் தனது பேச்சை நிறுத்தி விட்டு, யார் இது என்று கேட்டார். சி.சி.பாட்டீல் எழுந்து நான் தான் என்று கூறியதோடு, நீங்கள் பேசுவதை கேட்டு பசியால் ஏப்பம் வந்து விட்டது என்றார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. உங்களுக்கு துாக்கம் வந்தால் ஓய்வு எடுக்க செல்லுங்கள் என்று, முதல்வர் கூறினார்.
முதல்வர் பேசிய போது சில தகவல்களை தனது நிதி ஆலோசகரான, எம்.எல்.ஏ., பசவராஜ் ராயரெட்டியிடம் கேட்டார். சட்டசபையில் வந்தும் வேலை செய்கிறார் என்று கூறினார். இதை கிண்டல் அடித்த எதிர்க்கட்சியினர், ராயரெட்டிக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாமே என்றனர். அவர் ஏற்கனவே அமைச்சராக பணியாற்றி விட்டார் என்று சித்தராமையா கூறினார்.
பல்லாரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி அத்தி பூத்தது போல, சட்டசபைக்கு வந்து ஆச்சரியம் அளித்தார்.
எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுத்து முதல்வர் பேசும் போது, ஹரப்பனஹள்ளி சுயேச்சை பெண் எம்.எல்.ஏ., லதாவும், மேஜையை தட்டி வரவேற்றார்.
சபாநாயகர் காதர் பட்டு சட்டை, வேஷ்டி அணிந்து வந்திருந்தார்.
சட்டசபைக்கு பா.ஜ., விஜயேந்திரா வந்ததில் இருந்து தனது இருக்கையில் அமராமல், ஒவ்வொரு இருக்கையாக மாறி, மாறி அமர்ந்து, தன் கட்சி உறுப்பினர்களுடன் பேசினார்.

