சிவகுமாரின் படை தளபதியாக உருவெடுத்துள்ள பாலகிருஷ்ணா
சிவகுமாரின் படை தளபதியாக உருவெடுத்துள்ள பாலகிருஷ்ணா
ADDED : ஜூன் 17, 2026 01:47 AM

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா, முதல்வர் சிவகுமாரின் படை தளபதியாக உருவெடுத்துள்ளார்.
ராம்நகரின் கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.,வாக முதல்வர் சிவகுமார் உள்ளார். இவரது பக்கத்து தொகுதியான மாகடியில், காங்கிரசின் பாலகிருஷ்ணா, எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இருவரும் ஒக்கலிக சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், சிவகுமாரின் படை தளபதியாக பாலகிருஷ்ணா உருவெடுத்து உள்ளார். அதாவது சிவகுமாரை விமர்சித்து பேசும் எதிர்க்கட்சியினருக்கு, பாலகிருஷ்ணா தான் முதல் ஆளாக பதிலடி கொடுத்து வருகிறார்.
எதிர்க்கட்சி தலைவர் அசோக்கையும் இவர் விட்டு வைக்கவில்லை. அவரையும் ஒருமையில் பேசி விமர்சித்தார்.
தேசிய அரசியலில் காங்கிரசுக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும் போது, எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க கட்சி மேலிடம், கர்நாடகாவுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். வெளிமாநில எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்கும் பொறுப்பை, கட்சி மேலிடம் சிவகுமாருக்கே வழங்கி வந்தது.
தற்போது அவர் முதல்வராக இருப்பதால் தனது பொறுப்பை பாலகிருஷ்ணாவிடம் ஒப்படைத்துள்ளார்.
சமீபத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக, மத்திய பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை, பெங்களூரு அழைத்து வந்து ரிசார்ட்டில் தங்க வைக்க முயற்சி நடந்தது. எம்.எல்.ஏ.,க்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் பாலகிருஷ்ணா முன்நின்று செய்தார். இந்நிலையில், கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள, 7 எம்.எல்.சி., இடங்களை நிரப்ப, நாளை தேர்தல் நடக்கவுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டு போடுவதை தடுக்க, பிடதியில் உள்ள ரிசார்ட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்களை கண்காணித்து, அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்கும் பொறுப்பும், பாலகிருஷ்ணாவிடம் தான் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால், காங்கிரசில் அவரும் முக்கிய தலைவராக உருவெடுக்க ஆரம்பித்துள்ளார்.
