சரியான நேரத்தில் சிகிச்சையின்றி 1 வயது பெண் குழந்தை இறப்பு
சரியான நேரத்தில் சிகிச்சையின்றி 1 வயது பெண் குழந்தை இறப்பு
ADDED : ஜூலை 11, 2026 04:22 AM

ஹாவேரி: மயங்கி விழுந்த 1 வயது பெண் குழந்தைக்கு, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், குழந்தை உயிரிழந்தது. இதற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, பெற்றோர், கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.
ஹாவேரி நகரின், ஹாவநுாரு கிராமத்தில் வசிக்கும் மகேஷ் கிள்ளிகியாதர் என்பவருக்கு, பவானி என்ற, 1 வயது பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை விளையாடி கொண்டிருந்த குழந்தை, திடீரென மயங்கி விழுந்தது.
பெற்றோர் உடனடியாக கிராமத்தில் உள்ள, ஆரம்ப சுகாதார மையத்துக்கு துாக்கி சென்றனர். அங்கு, டாக்டர்கள் யாரும் இருக்கவில்லை. எனவே, அருகில் உள்ள, குத்தலா ஆரம்ப சுகாதார மையத்துக்கு, குழந்தையை துாக்கி சென்றனர். வழியிலேயே குழந்தை இறந்தது.
'ஹாவநுாரு ஆரம்ப சுகாதார மையத்தில், டாக்டர்கள் இருந்திருந்தால், குழந்தை பிழைத்திருக்கும். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், குழந்தை உயிரிழந்தது. இந்த அசம்பாவிதத்துக்கு, டாக்டர்களின் பொறுப்பற்ற தன்மை, சுகாதார மையத்தின் அலட்சியமே காரணம்' என, பெற்றோர், கிராமத்தினர் குற்றஞ்சாட்டினர்.
ஹாவநுாரு ஆரம்ப சுகாதார மையம் முன், குழந்தையின் உடலை வைத்து, பெற்றோர் மற்றும் கிராமத்தினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடப்பதை அறிந்து, ஹாவநுார் மருத்துவமனைக்கு வந்த தாலுகா மருத்துவ அதிகாரி பிரபாகர் குந்துாரா, கிராமத்தினரை, சமாதானம் செய்தார். சம்பவம் தொடர்பாக, குத்தரா போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
