சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் 'கெடு'
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் 'கெடு'
ADDED : ஜூலை 11, 2026 04:29 AM

பெங்களூரு: ''சாலைகளில் வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு வழங்கப்படும். வாகனங்களை அவர்களாகவே அப்புறப்படுத்தவில்லை என்றால், வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஏலத்தில் விடப்படும்,'' என, பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் நடைபாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதே வேளையில், போக்குவரத்து இடையூறாக பராமரிப்பின்றி வாகனங்களை, சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, அதன் உரிமையாளர்கள் சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .
இதை தடுக்கும் வகையில், பெங்களூரில் நேற்று சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில், ஒரு வாரத்தில் அபராதம் செலுத்தி, வாகனத்தை மீட்க வேண்டும். இல்லையெனில், அப்புறப்படுத்தப்படும்' என்ற எச்சரிக்கை நோட்டீசை, அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, அந்த வாகனங்களில் ஒட்டினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பொது இடங்களில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களை அகற்றும்படி இரண்டு வாரங்களுக்கு முன், அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், முறையாக பராமரிக்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்கள் அகற்றும் நடவடிக்கை துவங்கி உள்ளது.
நகரில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டு உள்ள, 1,581 வாகனங்களை, போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவற்றை அகற்ற ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது .
மாநகராட்சி, போலீசார் இணைந்து, பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களில், அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டுவர்.
வாகனத்தின் உரிமையாளர்கள், ஒரு வாரத்திற்குள் அபராதம் செலுத்தி, வாகனத்தை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், அவை அப்புறப்படுத்தப்படும். இது தொடர்பாக, நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்படும். 15 நாட்களுக்கு பின், இந்த வாகனங்கள் ஏலம் விடப்படும்.
நடைபாதைகள் சுத்தமாகவும், பாதசாரிகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு முன்னுரிமை அளித்துள்ளோம். ஓர் இடத்தில் அபராதம் செலுத்திய வாகனத்தை, அதன் உரிமையாளர்கள் எடுத்து சென்று, பொதுஇடத்தில் நிறுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள், 'பி.டி.பி. அஸ்த்ரா' செயலி மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
