ADDED : ஜூன் 13, 2026 01:57 AM

தங்கவயல்: தங்கவயல் 'பெமல்' தொழிற்சாலையின் தற்காலிக ஊழியர்கள், தங்களுக்கு சம்பளத்தை உயர்த்த கோரி, நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
தங்கவயலில் உள்ள பொதுத் துறை நிறுவனமான, பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற, பெமல் தொழிற்சாலையில் நிரந்தர தொழிலாளர்களாக, 1,200 பேர் மட்டுமே உள்ளனர். ஆனால், தற்காலிக தொழிலாளர்கள், 3,000த்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.
தற்காலிக பணியாளர்கள் தங்களின் சம்பளத்தை உயர்த்த கோரி, கடந்த நான்கு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். நேற்று, தற்காலிக தொழிலாளர் சங்க நிர்வாகிகளுடன் சம்பள உயர்வு தொடர்பாக பேசுவதற்கான கூட்டம் நடத்துவதாக, பெமல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆனால், திடீரென முன் அறிவிப்பின்றி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெமல் நுழைவாயிலின் முன் தற்காலிக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
