ADDED : மார் 26, 2025 05:37 AM

அ நிறம் | அளவு
சிக்கமகளூரு : 'அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றுவோம்' என்று கூறிய, துணை முதல்வர் சிவகுமார் உருவப்படம் மீது, பா.ஜ., தொண்டர்கள் முட்டை வீசினர்.
'மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க, அரசியலமைப்பை மாற்றுவோம்' என, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, ராஜ்யசபாவில் கூறினார்.
இதையடுத்து சிவகுமாருக்கு எதிராக கர்நாடகாவில் பா.ஜ., தீவிர போராட்டம் நடத்தி வருகிறது. சிக்கமகளூரு டவுன் ஆசாத் பார்க் பகுதியில் நேற்று காலை பா.ஜ., தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். சிவகுமாரின் உருவப்படத்தை எரித்தனர்.
பின், பேலுார் சாலைக்கு சென்றனர். 'அன்னபாக்யா' திட்டம் தொடர்பான அரசு விளம்பர பேனர் இருந்தது. அதில் இடம் பெற்றிருந்த சிவகுமார் உருவப்படத்தின் மீது முட்டை வீசினர். அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டினர்.
