குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு காங்கிரசை சாடிய பா.ஜ., அசோக்
குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு காங்கிரசை சாடிய பா.ஜ., அசோக்
UPDATED : ஏப் 28, 2026 08:06 PM
ADDED : ஏப் 28, 2026 06:44 PM
- நமது நிருபர் -: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமது ஷாரிக்கிற்கு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம், 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஏப்ரல் 27 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் நேற்று கூறியதாவது:
மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில், முகமது ஷாரிக் கைது செய்யப்பட்ட போது, அவருக்காக வக்காலத்து வாங்கியவர் துணை முதல்வர் சிவகுமார்.
தற்போது, முகமது ஷாரிக் குற்றவாளி என நிரூபணமாகி விட்டது. இச்சம்பவம் காங்கிரசின் உண்மை முகத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது. இதுவே, தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் காங்கிரசின் நிலைப்பாடு.
சிலர் ஓட்டுகளுக்காக, துரோகிகளை சகோதரர்களாக மாற்றுகின்றனர். இப்படிப்பட்ட சுயநலவாதி ஒருவர் விரைவில் முதல்வராக துடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையெல்லாம் சகித்துக் கொள்ளும் நிலைமைக்கு, கர்நாடக மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். ஓட்டு வங்கிக்காக திருப்திப்படுத்தும் அரசியலில் காங்கிரஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் ஆதாயத்துக்காக தேச விரோத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
