/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடிநீர் விநியோகிக்க ஸ்மார்ட் மீட்டர்கள் துல்லிய கட்டண வசூலுக்கு வாரியம் திட்டம்
/
குடிநீர் விநியோகிக்க ஸ்மார்ட் மீட்டர்கள் துல்லிய கட்டண வசூலுக்கு வாரியம் திட்டம்
குடிநீர் விநியோகிக்க ஸ்மார்ட் மீட்டர்கள் துல்லிய கட்டண வசூலுக்கு வாரியம் திட்டம்
குடிநீர் விநியோகிக்க ஸ்மார்ட் மீட்டர்கள் துல்லிய கட்டண வசூலுக்கு வாரியம் திட்டம்
ADDED : ஆக 21, 2025 10:59 PM
பெங்களூரு: குடிநீர் கட்டணத்தில் குளறுபடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், குடிநீர் இணைப்புக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, பெங்களூரு குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறியதாவது:
பெங்களூரில் 11.50 லட்சத்துக்கும் மேற்பட்ட, காவிரி குடிநீர் இணைப்புகள் உள்ளன. தற்போது குடிநீர் இணைப்புக்கு மெக்கானிக்கல் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த மீட்டர்கள், குடிநீர் பயன்பாட்டை துல்லியமாக காட்டுவது இல்லை. குளறுபடி நடப்பதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
நீரின் அழுத்தம் அதிகமாவது உட்பட தொழில்நுட்ப காரணங்களால், குடிநீர் கட்டணத்தில் குளறுபடி நடப்பது தெரிய வந்துள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மின்சாரம் விநியோகிக்க, ஸ்மார்ட் மீட்டரை பெஸ்காம் பொருத்துவது போன்று, குடிநீர் விநியோகத்திலும் ஸ்மார்ட் மீட்டரை அறிமுகம் செய்ய குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. மாதந்தோறும் 1 லட்சம் லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பயன்படுத்தும் மக்களுக்கு, மெக்கானிக்கல் மீட்டர்களால் பிரச்னை இல்லை.
குடிநீர் கட்டணம் சுமையாக இருப்பதில்லை. 5 லட்சம் லிட்டருக்கும் அதிகமான தண்ணீர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டி வருகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இவர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.
இந்தியாவின் மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஏற்கனவே ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்தகைய மீட்டர்கள் பொருத்தியதால், 100 சதவீதம் துல்லியமான பில் கட்டணம் வருகிறது.
பெங்களூரிலும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, குடிநீர் வாரியம் தயாராகிறது. முதற்கட்டமாக 1 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும்.
பெங்களூரின் அபார்ட்மென்ட்கள், தொழிற்சாலைகள், வர்த்தக கட்டடங்கள், ஐ.டி., - பி.டி., நிறுவனங்கள், ஹெச்.ஏ.எல்., ஏர்போர்ட், பி.ஹெச்.இ.எல்., உட்பட, காவிரி நீர் பயன்படுத்தும் 1 லட்சம் கட்டடங்களில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். இது வெற்றி அடைந்தால், நகரின் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவோம்.
ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, வாடிக்கையாளர்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில் மீட்டர் பொருத்தப்படும்.
இந்த மீட்டர்களை தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கும். ஸ்மார்ட் மீட்டர்களில் இருந்து, குடிநீர் வாரிய சர்வருக்கு ரீடிங் வரும்.
தினமும் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு, இதற்கான செலவு, தண்ணீர் விநியோகம் உட்பட, அனைத்து தகவல்களை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்திலேயே, ஆய்வு செய்யும் வசதி உள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்த, டெண்டர் அழைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.