
தாயை இழந்த துக்கத்திலும் சாதித்து காட்டிய திஷா
வணிக பாட பிரிவில் 600 க்கு 600 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்த திஷா மங்களூரின் மூடபித்ரி பகுதியை சேர்ந்தவர். ஆலுவா கல்லுாரியில் படித்தவர். இவரது தந்தை தினேஷ் கோட்டியான். தாய் சவிதா. தேர்வு துவங்கிய சில நாட்களில் திஷாவின் தாய் சவிதா மரணம் அடைந்தார்.
இதுபற்றி நேற்று திஷா கூறுகையில், '' தேர்வு ஆரம்பித்து மூன்று தேர்வுகள் முடிந்த நிலையில், எனது அம்மா சவிதா மயக்கம் போட்டு விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் இறந்தார். என் அம்மாவின் இழப்பை தாங்க முடியவில்லை. ஆனாலும் அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, தேர்வில் கவனம் செலுத்தினேன். ஆங்கிலத்தில் நான் கொஞ்சம் வீக்காக இருந்தேன். எனக்கு தனியாக வகுப்பு எடுத்து பள்ளியில் சொல்லி கொடுத்தனர். ஆடிட்டர் ஆவதே எனது இலக்கு. அதற்கு படியாக தயாராகி விட்டேன்,'' என்றார்.
தோழிகள் சாதனை
கலை பாடபிரிவில் பல்லாரியின் கூட்லிகி கொட்டூரில் உள்ள ஹிந்து கல்லுாரியில் படித்த மாணவிகள் அர்ச்சனா, சங்கீதா 600 க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று உள்ளனர். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவார்.
முதல் வகுப்பில் கைதி தேர்ச்சி
பல்லாரி மத்திய சிறையில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி அசோக்குமார் உள்ளார். படிப்பின் மீது ஆர்வம் கொண்ட அவர், சிறையில் இருந்தபடியே தேர்வு எழுதினார். நேற்று வெளியான தேர்வு முடிவில் 600 க்கு 481 மதிப்பெண் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று உள்ளது. கன்னடத்தில் 82, ஆங்கிலத்தில் 69, வரலாறு 94, பொருளாதாரம் 84, சமூகவியல் 77, அரசியல் அறிவியலில் 75 மதிப்பெண்கள் எடுத்து உள்ளார்.

