/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை தாக்கி சிறுவன் காயம்
/
மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை தாக்கி சிறுவன் காயம்
மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை தாக்கி சிறுவன் காயம்
மஹாதேஸ்வரா மலையில் சிறுத்தை தாக்கி சிறுவன் காயம்
ADDED : பிப் 11, 2026 06:50 AM

சாம்ராஜ் நகர்: மஹாதேஸ்வரா மலைக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த, 8 வயது சிறுவனை சிறுத்தை தாக்கியதால், பக்தர்கள் மத்தியில் பீதி உருவாகியுள்ளது.
சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனுாரில் உள்ள மஹாதேஸ்வரா மலையில் உள்ள சுவாமியை தரிசிக்க பக்தர்கள் வருகை தருகின்றனர். கடந்த மாதம் சுவாமியை தரிசிக்க தனது நண்பர்களுடன் பிரவீன் என்பவர் மலையில், பாதயாத்திரையாக ஏறிக் கொண்டிருந்தார்.
அப்போது புதரில் மறைந்திருந்த சிறுத்தை, பிரவீனை தாக்கி இழுத்து சென்றது. இதைப்பார்த்த நண்பர்கள் கூச்சலிட்டு, கற்களை வீசினர்.
சிறிது நேரத்தில் சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. ஆனாலும், சிறுத்தை தாக்கியதில் படுகாயம் அடைந்த பிரவீன் உயிரிழந்தார்.
இதையடுத்து, மஹா சிவராத்திரியை ஒட்டி, பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர் என்பதால், மலை பகுதியில் ஒரு கி.மீ.,க்கு ஒரு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது.
இவர்கள், விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிப்பதுடன், பக்தர்களின் பாதுகாப்பையும் பார்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு தெற்கு மாவட்டம் சென்னபட்டணா தாலுகாவை சேர்ந்த ஸ்ரேயாஸ், 8, என்ற சிறுவன், தனது குடும்பத்தினருடன் மலையில் பாதயாத்திரை சென்றான்.
மலையின் ஏழாவது திருப்பத்தில் மறைந்திருந்த சிறுத்தை, சிறுவன் மீது பாய்ந்தது. இதை பார்த்த உறவினர்கள், பக்தர்கள் கூச்சலிட்டனர். அச்சமடைந்த சிறுத்தை, அங்கிருந்து தப்பியோடியது.
சிறுத்தை தாக்கியதில் சிறுவனின் காதில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மலை மேல் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டான். பாதயாத்திரை சென்ற பக்தர்கள் ஒரு பெரிய சிறுத்தையையும், அதன் குட்டியையும் பார்த்ததாக தெரிவித்தனர். பக்தரை பாதயாத்திரையின் போதே, சிறுத்தை தாக்கியதால், மற்ற பக்தர்கள் பீதி அடைந்து உள்ளனர்.
மலை மஹாதேஸ்வரா வனவிலங்கு சரணாலய ஊழியர்கள், சிறுத்தை தாக்குதலை இன்னும் உறுதிபடுத்தவில்லை. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்து, ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்திய சிறுத்தையை தேடி வருகின்றனர்.

