/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமண வரவேற்புக்கு சென்ற மணமகனுக்கு கத்திக்குத்து மணமகளின் முன்னாள் காதலர் அனுப்பிய கும்பல் வெறி
/
திருமண வரவேற்புக்கு சென்ற மணமகனுக்கு கத்திக்குத்து மணமகளின் முன்னாள் காதலர் அனுப்பிய கும்பல் வெறி
திருமண வரவேற்புக்கு சென்ற மணமகனுக்கு கத்திக்குத்து மணமகளின் முன்னாள் காதலர் அனுப்பிய கும்பல் வெறி
திருமண வரவேற்புக்கு சென்ற மணமகனுக்கு கத்திக்குத்து மணமகளின் முன்னாள் காதலர் அனுப்பிய கும்பல் வெறி
ADDED : ஜன 31, 2026 05:11 AM
சாம்ராஜ்நகர்: தனது திருமண வரவேற்புக்காக சென்று கொண்டிருந்த மணமகனை, மர்ம கும்பல் கத்தியால் குத்தியது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுகாவின், குனகள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவீஷ், 34. இவருக்கும் கொள்ளேகால் தாலுகா, ஹொசஅனகள்ளி கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நேற்று முகூர்த்தத்திற்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது.
அதனால், நேற்று முன்தினம் மாலை, வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்பதற்காக, மதியம் மண்டபத்துக்கு ரவீஷ் தன் குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை, மற்றொரு காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கொள்ளேகாலின் எம்.ஜி.எஸ்.வி., கல்லுாரி சாலை அருகே வழி மறித்தனர்.
பின், மணமகன் ரவீஷை வெளியே இழுத்து, திருமணத்தை நிறுத்தும்படி கூறி கத்தியால் குத்த முற்பட்டனர். அவர் தடுத்ததில் இடது கை மற்றும் தோளில் கத்தி குத்து விழுந்தது. உடன், அந்த நபர்கள் தப்பியோடினர். காயமடைந்த ரவீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண், ஏற்கனவே ஒருவரை காதலித்தார்.
இருவரும் ஏதோ காரணத்தால் பிரிந்துள்ளனர். இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயமானதை அறிந்த முன்னாள் காதலர், ரவீஷுக்கு போன் செய்து, திருமணத்தை நிறுத்தும்படி மிரட்டினார்.
அந்த மிரட்டலை ரவீஷ் பொருட்படுத்தவில்லை. திருமண ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த கோபத்தில் அவரை கொலை செய்ய, இளம் பெண்ணின் முன்னாள் காதலர் முயற்சித்துள்ளார். வரும் நாட்களில் இதுபோன்ற தொந்தரவு ஏற்படும் என்பதால், திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, கொள்ளேகால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.
ரவீஷ் கூறுகையில், ''எனக்கு திருமணம் நிச்சயமான பெண்ணின் முன்னாள் காதலர், என்னை மிரட்டினார். அதைப்பற்றி பெண்ணிடம் கேட்ட போது, நான் காதலித்தது உண்மைதான். ஆனால், அந்தக் காதல் முறிந்து விட்டது.
''உங்களை மனப்பூர்வமாக விரும்பி திருமணத்துக்கு சம்மதித்தேன் என்று கூறியதால், திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். தற்போதைக்கு திருமணத்தை நிறுத்தினோம். அடுத்து என்ன செய்வது என, வீட்டு பெரியவர்கள் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

