தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு தம்பியை சுட்ட அண்ணன்
தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு தம்பியை சுட்ட அண்ணன்
ADDED : ஜூன் 26, 2026 11:51 PM
தேவனஹள்ளி: நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில், தம்பியை துப்பாக்கியால் சுட்ட அண்ணனை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி தாலுகா ஷெட்டரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு, 45. இவரது தம்பி சேத்தன், 40; இருவரும் விவசாயிகள்.
இவர்களின் விவசாய நிலமும் அருகருகே உள்ளது. நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதில் அண்ணன், தம்பிக்கு இடையே சில மாதங்களாக பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அவர்களை சக விவசாயிகள் சமாதானம் செய்தனர்.
வீட்டிற்கு சென்ற சந்துரு, நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்தார். நிலத்தில் நின்ற சேத்தன் மீது சுட்டார். அவரது தொடையில் குண்டு பாய்ந்தது. சுருண்டு விழுந்தவரை, அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள அண்ணன் சந்துருவை கைது செய்ய கூடுதல் எஸ்.பி., வெங்கடேஷ் பிரசன்னா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
