ADDED : மே 16, 2026 03:30 AM

விஜயநகரா: ஹம்பியில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த, விஜயநகர காலத்து கோவிலின் கூரையை இந்திய தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்து கண்டறிந்துள்ளனர்.
விஜயநகரா மாவட்டம் ஹம்பியில் வரலாற்று சிறப்புமிக்க சமண கோவில் வளாகம் உள்ளது. இதன் அருகே விஜயநகர பேரரசின் காலத்தை சேர்ந்த கட்டடங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கருதினர்.
இதனால், இந்தப் பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள முறைப்படி அனுமதி கோரப்பட்டிருந்தது. அனுமதி கிடைத்ததை அடுத்து, ஹம்பியை சேர்ந்த தொல்லியல் துறை அதிகாரிகள் அகழாய்வு பணியை துவக்கினர்.
மிகவும் கவனமாக நடைபெற்ற இந்த அகழாய்வு பணியின்போது, மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த கோவிலின் கல் கூரையை குழுவினர் கண்டறிந்தனர். இது, பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில் இருந்ததை தெரிய வருகிறது. இந்த கூரை, 4.35 மீட்டர் நீளமும், 4.26 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கிறது.
இந்த கூரை குறித்து, ஹம்பி வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பு ஆய்வாளர் கே.ராமகிருஷ்ண ரெட்டி கூறியதாவது:
இது, முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. கூரையை சுற்றிலும் அகழாய்வு தொடர்ந்து நடைபெறும். கோவில் முழுமையாக மீட்கப்பட்டு, கல்வெட்டுகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படும். இங்கிருந்து ஏராளமான வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம்.
முதற்கட்ட ஆய்வுகளின்படி, கோவிலின் கட்டுமானம் பெருமளவில் சேதமடைந்துள்ளது. தற்போது, கர்ப்பகிரகத்தின் கூரை மட்டுமே காணப்படுகிறது. கோவிலின் சுவர்கள், 10 அடி உயரத்துடன் சிதைவின்றி இருக்கலாம் என்று நம்புகிறோம்.
இந்த கண்டுபிடிப்பு, ஹம்பியில் உள்ள ஜைனர்களின் குடியேற்றம், மத மற்றும் கட்டடக்கலையை புரிந்துகொள்ள உதவும்.
கட்டமைப்பு எஞ்சிய பகுதிகளை பாதுகாப்பாக மீட்கவும் விரிவான ஆவணப்படுத்தலும், ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
