பி.பி.எல்., கார்டு ரத்து பணி தற்காலிக நிறுத்தம்: அமைச்சர்
பி.பி.எல்., கார்டு ரத்து பணி தற்காலிக நிறுத்தம்: அமைச்சர்
ADDED : ஆக 15, 2026 11:32 PM

உடுப்பி: ''மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அட்டைகளை ரத்து செய்யும் பணி நடந்து வருகிறது. அது தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது,'' என, உணவு பொது வினியோக துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தெரிவித்தார்.
உடுப்பியில் நடந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:
கர்நாடகாவில், 7.59 லட்சம் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான ரேஷன் அட்டைகளை ரத்து செய்யும்படி, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே, நான்கு லட்சம் அட்டைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இருப்பினும் முறையாக சரிபார்ப்பு நடத்துவதற்காக, மீதமுள்ள அட்டைகளை ரத்து செய்யும் செயல்முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
ரேஷன் அட்டைகளுக்கு, 'இ - கே.ஒய்.சி., எனும் வாடிக்கையாளரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' செய்து, ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது மீண்டும் கே.ஒய்.சி., செய்யும்படி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மாநிலத்தில் உள்ள 2.59 கோடி ரேஷன் அட்டைகளுக்கு மீண்டும் கே.ஒய்.சி., செய்யப்பட உள்ளது.
அட்டைதாரர்கள் இறந்துவிட்டாலோ அல்லது வறுமை கோட்டுக்கு மேல் சென்றவர்களுக்கு பி.பி.எல்., வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அட்டை தேவைப்படாது.
இத்தகவலை, கே.ஒய்.சி., செயல்முறையின் மூலம் கிடைக்கும். செப்., 31ம் தேதிக்குள் கே.ஓய்.சி., செய்து முடிக்க வேண்டும். புதிய பி.பி.எல்., கார்டுகள் வழங்குவது குறித்து, விவாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
